கேஜி எரிவாயு ரிலையன்ஸ் குடும்பச் சொத்தா? - அரசு காட்டமான கேள்வி!
மும்பை: கேஜி படுகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்படும் எரிவாயு முழுக்க முழுக்க அரசுக்கு மட்டுமே சொந்தமானது. அது அம்பானிகளின் குடும்பச் சொத்தல்ல, அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள. இது தொடர்பாக முகேஷ் மற்றும் அனில் அம்பானிகள் போட்டுள்ள ஒப்பந்தம் சட்ட விரோதமானது, என மத்திய அரசு தெளிவாகக் கூறி விட்டது. இதுகுறித்து சிறப்பு விடுமுறைக் கால மனு ஒன்றையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு.
கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் அரசுக்காக எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம். அதாவது அரசின் ஒப்பந்ததாரராக அது செயல்பட்டு வருகிறது.
எரிவாயு எடுக்க ஆரம்பித்த பிறகு, முகேஷ் அம்பானிக்கும் அனில் அம்பானிக்கும் பிரச்சினை வெடித்தது. ரிலையன்ஸ் எடுக்கும் எரிவாயுவில் குறிப்பிட்ட சதவிகிதத்தை யூனிட்டுக்கு 2.34 டாலருக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ஸஸ் லிமிடட் நிறுவனத்துக்கு அடுத்த 17 ஆண்டுகளுக்கு தரவேண்டும் என்றும், இதுகுறித்து ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் அனில் அம்பானி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இப்போது இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயுவை அரசுக்காக எடுத்துத் தரும் ஒரு காண்டிராக்டர்தான் என்றும், அவர்கள் எரிவாயுவை தங்கள் குடும்பச் சொத்தாக நினைத்து தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள ஒப்பந்தம் போடுவதெல்லாம் சட்ட விரோதமானது என்றும் அரசு உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுமுறைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அம்பானிகளுக்குள் போடப்பட்ட ஒப்பந்தம் சட்ட விரோதமானதென்றும், அது எந்த வகையில் செல்லத் தக்கது அல்ல என்று அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிஸி நிறுவனம் கைவசம் இருக்கும்போது, தேவையில்லாமல் இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸூக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்னவென்று கடும் விமர்சனமும் கிளம்பியுள்ளது.