புதுச்சேரி காங்கிஸ் நிர்வாகிகள் 6 பேர் தற்காலிக நீக்கம் !
புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் 6 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வி. நாராயணசாமி போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து பா.ம.க சார்பில் பேராசிரியர் எம்.ராமதாஸ் போட்டியிட்டார். தேர்தலில் தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நாராயணசாமி, முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ரங்கசாமி அதை ஏற்று கொள்ளவில்லை. மேலும் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் புறக்கணித்தார்.
அதே போன்று அவரது ஆதரவாளர்களும் பாமக வேட்பாளர் ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகின்றது .
இதனையடுத்து, முன்னாள் முதல்வர் ரங்கசாமி, அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு விளக்கம் கேட்டு புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை ரங்கசாமியும், அவரது ஆதவாளர்களும் மறுத்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி தேங்காய்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், விநாயகமூர்த்தி, சாந்தகுமார், கோவிந்தராஜன், ஷாஜகான், சுரேஷ் ஆகியாரை புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.