இடைத் தேர்தலில் போட்டியிட திமுகவினரிடையே பெரும் ஆர்வம்
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட திமுகவினர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்படுகிறது. 22ம் தேதி இவர்களிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது.
பர்கூர், கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
இதில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. விண்ணப்பம் தர திமுகவினர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்படுகிறது.
கம்பம் தொகுதியில் போட்டியிட கம்பம் ராமகிருஷ்ணன், இளையாங்குடிக்கு மண்டல தலைவர் க. தனசேகரன் மனு கொடுத்தனர்.
முதல் நாளான இன்று 12 மணிக்குள் 11 மனுக்கள் குவிந்தது. தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட நாளை மனு கொடுக்கப் போவதாக மு. கண்ணப்பன் கூறினார்.
நாளை மாலை 6 மணி வரை விருப்ப மனு கொடுக்கலாம்.
விருப்ப மனுக்களைக் கொடுத்தவர்களிடம் 22-ம் தேதி நேர்காணல் நடைபெறும்.
தொண்டாமுத்தூரில் கண்ணப்பன், கம்பத்தில் ராமகிருஷ்ணன் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.