தென்னை மரத்தில் பதுக்கிய வெடிகுண்டுகள் பறிமுதல்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தென்னை மரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்த போலீசார் அவைகளை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ளது பாலையூர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (58). இவரது வயலில் பண்ணை ஆளாக வேலை பார்த்து வருபவர் வசந்தகுமார் (35).
வசந்தகுமாரை அழைத்த சின்னசாமி, தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்குமாறு கூறினார்.
அப்போது, வசந்தகுமார் மரத்தில் ஏறிய போது, தென்னை மரத்தில் ஒரு தோல் பை இருந்தது.அதை பிரித்து பார்த்த போது அதில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இது குறித்து சின்னசாமி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து வி.களத்தூர் போலீசார், மோப்ப நாயுடன் சம்பவ இட்த்திற்கு விரைந்தனர்.அங்கு தென்னை மரத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் எஸ்.பி. வனிதா, ஏ.டி.எஸ்.பி. ராமையன் ஆகியோர் முன்னிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் நாட்டு வெடிகுண்டை வெடிக்காமல் செயலிழக்கச் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.