ஓட்டு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம்-பாஜக
சென்னை: மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால் அது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்ட வேண்டும் என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் உள்ள முகாம்களில் 2.8 லட்சம் தமிழர்கள் அடைபட்டுள்ளனர். இவர்களில் 50,000 பேர் குழந்தைகள். அந்த முகாம்கள் எப்படி இருக்கின்றன என்று உலக அளவில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் அதிர்ச்சியான செய்திகளில் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
அவர்களுக்கு போதிய மருத்துவர்கள், மருந்துகள் இல்லை. குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. முகாம்களில் சுகாதாரம் இல்லை.
விடுதலைப் புலிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் அப்பாவி தமிழ் மக்களை பற்றி கவலையடைகிறோம். அந்த மக்களுக்கு சிங்கள மக்களுக்கு இணையாக அனைத்து வகை சுதந்திரமும், கல்வி மற்றும் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
3வது அணி ஒரு வேகத்தடை போன்றது. அவர்களால் எதுவுமே செய்ய முடியாது.
தேர்தலில் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதை பல நிபுணர்கள் செய்முறை விளக்கத்தோடு நிரூபித்துள்ளனர்.
கடந்த தேர்தலில் ஹைதராபாத்தில் ஒரு பூத்தில் உள்ள மின்னணு ஓட்டு எந்திரத்தில் யார் ஓட்டு போட்டாலும் அதில் எங்கள் தாமரை சின்னத்தில் மட்டுமே ஓட்டு பதிவானது. இதைத் தொடர்ந்து அங்கு மறுநாள் மீண்டும் ஓட்டுப்பதிவு நடந்தது.
எனவே மீண்டும் வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். அதே நேரத்தில் மின்னணு ஓட்டு எந்திரத்திலும் வாக்களிக்க வேண்டும். அதாவது இரண்டிலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓட்டு எண்ணும்போது சந்தேகம் வரும்போது வாக்குசீட்டை பார்க்கலாம்.
எனவே மின்னணு ஓட்டு எந்திர குறைபாடுகள் குறித்து விளக்கம் அளிக்க அனைத்து அரசியல் கட்சிகளி்ன் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்ட வேண்டும் என்றார் நாயுடு.