கண்மூடித்தனமாக சுட உத்தரவிடப்பட்டது-கசாப்
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு நான் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள்தான் காரணம் என்று நேற்று மும்பை தனி கோர்ட்டில் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான் கசாப்.
இந்த நிலையில் இன்று மேலும் சில தகவல்களை அவன் கோர்ட்டில் நீதிபதி தஹிளியானியிடம் தெரிவித்தான்.
கசாப் நீதிபதி முன்பு கூறுகையில், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் குறித்த முழுத் தகவல்களையும் எங்களை வழி நடத்திய பாகி்ஸ்தானியர்கள் எங்களிடம் தெரிவித்திருந்தனர்.
ரயில் நிலையத்திற்குள் சென்றதும் கண்ணில் படுகிறவர்களையெல்லாம் சுட்டுக் கொல்லுமாறும், சிலரைப் பிணையாளிகளாகப் பிடிக்குமாறும் உத்தரவிட்டனர்.
அவர்களை யாரேனும் மீட்க வந்தால் அவர்களையும் சுடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படியே நாங்கள் நடந்தோம் என்றான்.
நீ பாகிஸ்தானிதான் என்று பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டதே. அது உனக்குத் தெரியுமா என்று நீதிபதி கசாப்பிடம் கேட்டபோது, ஜெயிலில் இருந்த பாதுகாவலர்கள் மூலம் தெரிந்து கொண்டேன் என்றான் கசாப்.
தொடர்ந்து அவன் கூறுகையில், நான் பாகிஸ்தானைச் சேர்நதவன் என்று எனது நாடு ஒப்புக் கொண்டதால்தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தேன் என்றும் கூறினான் கசாப்.
இதையடுத்து விசாரணையை புதன்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.