இலங்கை கெடுபிடி-அலுவலகங்களை மூடிய ரெட்கிராஸ்
கொழும்பு: இலங்கை அரசின் கெடுபிடி காரணமாக தனது நான்கு அலுவலகங்களை மூடி விட்டது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.
செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தங்களது பணிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து செஞ்சிலுவைச் சங்கம் தனது நான்கு அலுவலகங்களை மூடி விட்டது. இந்த நான்கும் கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்தன.
இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதாபிமான தேவைகள் இருப்பின் அவற்றைப் பூர்த்தி செய்யும் பணியில் தொடர்ந்து செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அக்கரைப்பட்டு, மட்டக்களப்பு, முத்தூர், திரிகோணமலை ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த எங்களது அலுவலகங்களை மூடியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் செய்து வந்த அயராத பணிகளால் எரிச்சல் அடைந்த இலங்கை அரசு, போர் முடிந்து விட்டதால் உங்களது பணிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என கடந்த மாதம் உத்தரவிட்டது.
உயிரிழந்த அப்பாவித் தமிழர்கள் குறித்தும், பாதிக்கப்பட்டோருக்கு சேவை செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் வெளிப்படையாக செஞ்சிலுவைச் சங்கம் பேசி வந்ததை இலங்கை அரசு விரும்பவில்லை.
மேலும், இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று சேவை செய்ய செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து அனுமதி கோரி வந்தது. ஆனால் அதை இலங்கை அரசு ஏற்கவில்லை. இது தொடர்பாகவும் இரு தரப்புக்கும் இடையிலான உறவு கசந்தது.
3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை திறந்த வெளி சிறைச்சாலையைப் போன்ற முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு முழுமையான அளவில் சேவையாற்ற யாரையும் அனுமதிக்காத இலங்கை அரசு தற்போது சேவை நிறுவனங்களின் சேவையைக் குறைத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications