மாணவியை படம் எடுத்து மிரட்டிய வாலிபர்
சென்னை: சட்டக் கல்லூரி மாணவி தன்னுடன் நெருக்கமாக பேசியதை செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி மிரட்டிய நபரை, மாணவியின் சக நண்பர்கள் சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ராம். கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணியாற்றும் இவர், சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மும்தாஜ் என்ற மாணவியைக் காதலித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் மும்தாஜைப் பார்க்க கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது ராமை, மும்தாஜுடன் படிக்கும் மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ராமும், மும்தாஜும் அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் வந்துள்ளனர். அப்போது அவற்றை செல்போனில் படம் பிடித்துக் கொள்வாராம் ராம்.
இந்த நிலையில் ராமின் போக்குப் பிடிக்காத மும்தாஜ், இனிமேல் பழக வேண்டாம், பிரிந்து விடலாம் என்று கூறியுள்ளார். மேலும் பேசுவதையும் நிறுத்தி விட்டார்.
இதனால் கோபமடைந்த ராம், நேற்று சட்டக் கல்லூரிக்கு வந்து மும்தாஜை சந்தித்து என்னுடன் பேசாவிட்டால் செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளதை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்று மிரட்டினாராம்.
இதைப் பார்த்து அருகில் இருந்த மும்தாஜின் நண்பர்கள் கோபமடைந்து ராமை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தி்ல ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணை நடத்தினர். இரு தரப்பினரும் புகார் கொடுக்க விரும்பாததால், இதை சுமூகமாக தீர்த்து வைத்து அனுப்பி விட்டனர் போலீஸார்.