சூரிய கிரகணம்-பேரழிவு ஏற்படாமல் தடுக்க 101 கிலோ இட்லியுடன் மெரீனாவில் பூஜை!!!
கடந்த 7ம் தேதி சந்திர கிரகணம் நடந்தது. இன்று முழு சூரிய கிரகணம் நடந்தது. அடுத்த மாதம் 6ம் தேதி இன்னொரு சந்திர கிரகணம் வருகிறது.
இப்படி அடுத்தடுத்து கிரகணங்கள் நிகழ்வதால் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் சம்பவிக்கும் என ஜோசியக்காரர்கள் பீதியைக் கிளப்பி விட்டுள்ளனர்.
இதையடுத்து கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனம் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஜோதிடர்களின் ஆலோசனையைக் கேட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் நவதானியங்களால் ஆன பிரமாண்ட இட்லியை வைத்து பூஜை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி இந்த பிரமாண்ட இட்லி தயாரிக்கப்பட்டு இன்று காரில் ஏற்றி கடற்கரைக்குக் கொண்டு வந்தனர்.
கலங்கரை விளக்கம் அருகே இட்லியை இறக்கி கடற்கரையில் வைத்து பூஜைகள் தொடங்கின.
இந்தப் பரிகார பூஜையில், தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேத மந்திரங்கள் முழங்க பூஜை அமர்க்களமாக நடந்தது. பின்னர் இட்லியை படகில் ஏற்றி கொண்டு போய் கரைத்தனர்.
பிரமாண்ட இட்லி என்பதால் வழக்கமான சட்டியில் வைத்து கேஸ் அடுப்பி்ல் வேக வைக்காமல், விறகு அடுப்பி்ல வைத்து அவித்தனராம்.
கிட்டத்தட்ட ஒரு மாத கஷ்டத்திற்குப் பின்னர் இந்த ராட்சத இட்லி உருவானதாம்.
இந்த இட்லியை உருவாக்கியவர் பெயர் இனியவன். இவர் கடந்த ஜனவரி மாதம் கிட்டத்தட்ட 90 கிலோ எடையுடன் கூடிய 3 இட்லிகளைத் தயாரித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவராம்.
உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது, நாம் இன்னும் இட்லியிலேயே இருக்கிறோம்..