80 வயது தாத்தாவை மணந்த பேத்தி கு.க ஆபரேஷனின்போது மரணம்
திருச்சி: தனது 80 வயது தாத்தாவையே மணந்த பெண், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சையின்போது மரணம் அடைந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் வாளவந்தி ஊராட்சியைச் சேர்ந்த அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோனேரி (80). தனது பேத்தி மாரியாயி (23) என்பவரை கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் மாரியாயிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் பிறந்தனர். இதையடுத்து குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.
இதையடுத்து தா.பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகினர். நேற்று முன்தினம் தா.பேட்டை மருத்துவமனைக்கு மாரியாயி அழைத்துச் செல்லப்பட்டார்.
டாக்டர்கள் மாரியாயியை பரிசோதனை செய்து குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்வதற்கு மயக்க மருந்து கொடுத்ததாக தெரிகிறது. அப்போது மாரியாயிக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் டாக்டர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அரசு ஆம்புலன்சில் அனுப்பினர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் மாரியாயியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்வதற்காக அரசு மருத்துவமனையில் மாரியாயி சேர்க்கப்பட்டு மரணமடைந்ததில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறி அவரது உறவினர் சின்னசாமி போலீசில் புகார் கொடுத்தார்.