இலங்கை அணி மீது தாக்குதல்-'ரா' சதியாம்!
இஸ்லாமாபாத்: லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியனர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பாகிஸ்தானில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் இந்தியாவின் ரா உளவு அமைப்புக்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரத்தை இந்தியாவிடம் வழங்கியுள்ளது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளாக பாகிஸ்தான் செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டான் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானில் நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் இந்தியாவின் ரா உளவு அமைப்புக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பாகிஸ்தான் அரசு, இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
எகிப்தில் நடந்த அணி சேரா நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் கிலானி, இந்த ஆவணப் பட்டியலை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார்.
இந்த ஆதாரங்களை அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான சதிச் செயல்களுக்கு தனது மண்ணை ஆப்கானிஸ்தான் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விஷயங்களை இந்தியா படு ரகசியமாக வைத்துள்ளது. ஆனால் அவற்றில் இடம் பெற்றுள்ள ஆதாரங்கள் குறித்த தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளன.
அதில் முக்கியமானது, லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல். அதேபோல மனவான் போலீஸ் நிலையம் மீது நடந்த இன்னொரு தாக்குதல்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சதிகாரர்களுடன் ரா அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தனர். அந்த ரா அதிகாரிகள் யார் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு இடையே நடந்த பேச்சுக்கள் தொடர்பான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இந்திய ஆயுதங்கள், வெடிபொருட்கள் குறித்த விவரங்களும் பாகிஸ்தான் அரசு அளித்துள்ள தகவல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இதுதவிர சதியில் ஈடுபட்டவர்கள், ரா அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர் விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக புகுந்து, அங்குள்ள தங்களது கூட்டாளிகளுடன் இணைந்துள்ளனர். அந்தக் கூட்டாளிகள் வசிரிஸ்தானிலிருந்து லாகூர் வந்தனர். இவர்களின் பெயர் விவரங்களும் இந்தியாவிடம் தரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரவாதிகளை பயிற்றுவித்து அனுப்பும் செயலிலும் இந்தியா ஈடுபடுகிறது. இந்த பயிற்சி முகாம்களை அது ஆப்கானிஸ்தானில் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் தீவிரவாத சம்பவங்களைத் தூண்டி விடுவதற்காக பெருமளவில் நிதியுதவியையும் ரா அமைப்பு செய்து வருகிறது.
பலுசிஸ்தானில் மிகப் பெரிய அளவில் தீவிரவாதத்தை இந்தியாதான் தூண்டி விட்டு வருகிறது. அங்குள்ள பிரம்தாக் பக்தி, பர்ஹான், ஷேர் கான் ஆகியோருடன் இந்தியாவுக்கு நெருங்கிய தொடர்புகள் உள்ளன.
இந்திய ரா அமைப்பினருடன், இந்த தீவிரவாதிகள் சந்தித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஆதாரமாக இணைக்கப்பட்டுள்ளன.
பக்தி இந்தியாவுக்குச் சென்று ரா அதிகாரிகளை சந்தித்தது தொடர்பான தகவல்களும் ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இந்தியாவின் நிதியுதவியுடன் செயல்படும் தீவிரவாதப் பயிற்சி முகாம் உள்ளது. இங்குதான் பலுசிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்கிறது. இவர்களுக்கு இந்தியா ஆயுதம், வெடிபொருள் உள்ளிட்டவற்றைக் கொடுத்து பாகிஸ்தானில் நாச வேலைகளைச் செய்யுமாறு கூறி வருகிறது.
இந்த ஆதாரங்களை வாங்கிப் பார்த்த பிரதமர் மன்மோகன் சிங் இவற்றைப் பரிசீலிப்பதாகவும், இவற்றில் உண்மை இருந்தால் அதை சரி செய்வதாகவும் உறுதியளித்தார் என்றும் டான் செய்தி கூறுகிறது.
இதெல்லாம் உண்மையா என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித்திடம் கேட்டபோது, ஆமாம், இவை எல்லாம் குறித்துதான் எகிப்து சந்திப்பின்போது இந்தியப் பிரதமருடன் பேசப்பட்டது என்றார்.
விட்டால், கிலானி, சர்தாரி சண்டைக்குக் கூட இந்தியாதான் காரணம் என்று கூறுவார்கள் போல..












Click it and Unblock the Notifications