கலாமை சோதனையிட்டது தவறில்லை-யுஎஸ்
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் சோதனையிட்டதில் தவறு ஏதும் இல்லை என்று அமெரிக்க போக்குவரதது பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
டெல்லியிலிருந்து கடந்த ஏப்ரலில் நியூயார்க்குக்கு கலாம் பயணம் மேற்கொண்டபோது பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் மரபுகளை மீறி அவரை அசிங்கப்படுத்தியது அமெரிக்காவின் காண்டினென்டல் ஏர்லைன்ஸ்.
இதுகுறித்து தெரிந்தும் கூட மத்திய அரசு கமுக்கமாக இருந்து வந்தது. ஆனால் விஷயம் கசிந்ததும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து கலாமிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக காண்டினென்டல் அறிவித்தது. ஆனால், அப்படி யாரும் தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று கலாம் கூறிவிட்டார்.
இதையடுத்து கலாம் டெல்லியில் இல்லாததால் அவரிடம் மன்னிப்பு கேட்க முடியவில்லை என்றது. அவர் டெல்லி திரும்பியதும் எங்களது அதிகாரிகள் நேரடியாக சந்தித்து மன்னிப்பு கேட்பார்கள் என்று கூறியுள்ளது அந்த நிறுவனம்.
இந் நிலையில் அமெரிக்க போக்குவரதது பாதுகாப்பு அமைப்பு (Transportation Security Administration-TSA) காண்டினென்டல் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையி, யார் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் இருந்திருந்தாலும் அவர்களை சோதனையிட வேண்டியது விமான நிறுவனத்தின் கடமை. அதைத் தான் அவர்கள் செய்துள்ளனர். இதில் தவறேதும் இல்லை.
முக்கிய தலைவர்கள், அவர்களது குடும்பத்தினரை சோதனையிடக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு ஒரு பட்டியல் தந்துள்ளதாக அறிகிறோம். ஆனால், அமெரிக்காவிலோ, வேறு நாடுகளிலோ பயணிக்கும் அனைத்து நாட்டு விஐபிக்கள், முன்னாள் தலைவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டு தான் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
4 அதிகாரிகள் மீது வழக்கு:
இந் நிலையில் காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 4 அதிகாரிகள் மீது மத்திய அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநர் லாரன்ட் ரெகோரா, விமான நிலைய மேனேஜர் ஆலன் பீல்ட், பாதுகாப்பு மேலாளர் சிந்தியா கார்லியர், பாதுகாப்பு பொறுப்பாளர் ஜெய்தீப் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைத் தேடி அலைந்த கலாம்!:
இதற்கிடையே அப்துல் கலாமின் பாதுகாப்பு எவ்வளவு மகா மட்டமாக உள்ளது என்பதற்கு இன்னொரு உதாரணமாக, நேற்று ஒரு சம்பவம் கொச்சியில் நடந்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் பங்கேற்ற அப்துல் கலாம், விழா முடிந்து வெளியே வந்தபோது அவர் செல்ல வேண்டிய காரைக் காணாததால் கிட்டத்தட்ட கால் மணி நேரம் அந்தக் கல்லூரி வளாகத்திற்குள் நடந்து அலைந்துள்ளார்.
கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலாம் கலந்து கொண்டார்.
விழா முடிந்ததும் அவர் கல்லூரி அதிகாரிகளால், நானோ டெக்னாலஜி மற்றும் அணு மருத்துவத் துறை கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு தனது பயணத்தை முடித்து விட்டு வெளியே வந்த கலாம், தான் பயணிக்க வேண்டிய காரைக் காணாமல் திடுக்கிட்டார்.
காருக்குக் காத்திராமல், அதைத் தேடி நடக்க ஆரம்பித்து விட்டார். இதைப் பார்த்து அவருடன் நான்கு போலீஸ் அதிகாரிகளும் நடக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட கால் மணி நேரம் அந்தப் பகுதி முழுக்க காரைத் தேடி அலைந்துள்ளார் கலாம். ஒரு கட்டத்தில் காரைக் கண்டுபிடிக்க முடியாமல் வெறுத்துப் போன அவர், இப்படியே நடந்தால் பேசாமல் விமான நிலையத்திற்கே போய் விடலாம் போலிருக்கிறதே என்று கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து கலாம் செல்ல வேண்டிய கார் ஒரு வழியாக வந்து சேர்ந்தது.
கலாம் இப்படி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்தபோது அவருடன் வெறும் நான்கு போலீஸ் அதிகாரிகளே உடன் இருந்துள்ளனர். நாட்டின் மிக மிக முக்கிய நபரான கலாமுக்கு இப்படித்தான் பாதுகாப்பு தருவதா அல்லது இப்படித்தான் அலைய விடுவதா..
இருப்பினும், இதில் பாதுகாப்பு குளறுபடி இல்லை என்று போலீஸார் மறுத்துள்ளனர். கல்லூரிக்கு வந்த கலாம் மெயின் கேட்டிலேயே இறங்கிக் கொண்டார். இதையடுத்து கார் அங்கேயே நின்றது.
ஆனால் திரும்பி வரும்போது வேறு பகுதி வழியாக கலாம் வந்து விட்டார். இதனால்தான் குழப்பமாகி விட்டது என்கின்றனர்.
போலீஸார் இப்படிக் கூறுகிறார்கள். ஆனால் நாட்டின் மிகப் பெரிய விஐபியான கலாம் படு சாவாதனமாக நடந்து போனதை கல்லூரி வளாகத்தி்ல் உள்ள மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும், பார்வையாளர்களும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து பார்த்தனர்.
சிலர் ஓடி வந்து அவருடன் கை குலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் ஆட்டோகிராபும் வாங்கினர்.
பின்னர் காத்திருந்த காரில் ஏறி கலாம் விமான நிலையம் சென்ற கலாம் அங்கிருந்து சென்னை கிளம்பினார்.












Click it and Unblock the Notifications