பர்கூர் தொகுதியா... அலறும் காங்கிரஸ்!
சென்னை: இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஸ்ரீவைகுண்டம் மற்றும் பர்கூர் தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் தரப்பு அதிருப்தியடைந்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள இளையாங்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.
இதில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளைக் காங்கிரஸ் கோரி வருகிறது. இது தவிர காங்கிரஸ் கோஷ்டிகள் ஒவ்வொன்றும் தங்களுக்கு வசதியான பிற தொகுதிகளைக் கோரி வருகின்றன. இதனால் காங்கிரசில் இந்த விஷயத்தில் முழு ஒற்றுமை இல்லை.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது திமுக. தொண்டாமுத்தூரை மதிமுகவிலிருந்து தனது கட்சிக்குத் தாவிய மு.கண்ணப்பனுக்கும், அதே போல கம்பம் தொகுதியை மதிமுகவிலிருந்து தாவி வந்த ராமகிருஷ்ணனுக்கும் வழங்க திமுக நினைக்கிறது.
இது தவிர இளையாங்குடியை தன் வசமே வைத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
இதனால் காங்கிரசுக்கு பர்கூரையும் ஸ்ரீவைகுண்டத்தையும் தர திமுக நினைப்பதாகத் தெரிகிறது. இதில் ஸ்ரீவைகுண்டம் காங்கிரசுக்கு ஓ.கே. ஆனால், தங்களுக்கு கொஞ்சமும் செல்வாக்கே இல்லாத பர்கூரை தலையில் கட்ட திமுக கருதுவதால் காங்கிரஸ் நடுங்கிப் போயுள்ளது.
இந்தத் தொகுதியில் ஜெயலலிதாவே ஒருமுறை திமுகவிடம் தோற்றுள்ளார் என்றாலும் அது காங்கிரசுக்கு சாதகமானதாக நிலையில் இல்லை.
இதனால் அங்கு கோதாவில் இறங்க காங்கிரஸ் அஞ்சுகிறது. தங்களுக்கு தொண்டாமுத்துரே வேண்டும் என்று கோரி வருகிறது.
2 நாளில் திமுக வேட்பாளர் பட்டியல்..
இதற்கிடையே நேற்று நேர்காணலை முடித்துவிட்ட முதல்வர் கருணாநிதி, வேட்பாளர் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்:
இதற்கிடையே இடைத் தேர்தலை சந்திப்பது குறித்து மதுரையில் திமுக தென் மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில் நடைபெற்றது.
இதில் தென் மண்டலத்துக்குட்பட்ட கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் நிலைமை, வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.