இடைத் தேர்தலில் ரஜினி மன்ற நிர்வாகி போட்டி!
பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிட ரஜினி மன்ற தலைவர் சக்திவேல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பர்கூரை அடுத்த மல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக உள்ளார்.
இந்தத் தொகுதியில் தான் தேர்தல் மன்னன் பத்மராஜனும் போட்டியிடுகிறார்.
வாக்குப்பதிவு விவரம்: எஸ்எம்எஸ் மூலம் அறியலாம்
இந் நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் வாக்கு பதிவு விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தொகுதி தேர்தல் அலுவலர் ரவிசந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிபர்களிடம் கூறியதாவது,
ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தொகுதியில் 172 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் 60 வாக்குசாவடிகள் மிகவும் பதட்டமானவை.
இந்த வாக்கு சாவடிகளில மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அனைத்து வாக்கு சாவடிகளிலும் மத்திய நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அனைத்து வாக்கு சாவடிகளிலும் வெப் கேமிரா பொருத்தப்படுகிறது. லேட் டாப் மூலம் வாக்குசாவடி செயல்பாடுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இந்த லேப் டாப்பை கண்காணிக்க கம்யூட்டர் மாணவர்கள், ஆசிரியர் பயன்படுத்தப்பட உள்ளனர்.
வாக்கு பதிவு விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிஎஸ்என்எல் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. பிஎஸ்என்எல் செல்போன் இல்லாத வாக்கு சாவடி பிஎஸ்என்எல் சிம்கார்டு வழங்கப்பட உள்ளது. இவர்கள் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பதிவான வாக்குகளை எஸ்எம்எஸ் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் தேர்தல் அலுவலகத்தில வைக்கப்பட்டுள்ள சர்வருக்கு வந்து சேரும். இதனால் பதிவான வாக்குகளை எளிதில் கண்டறியலாம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளோம்.
தேர்தல் பணியில் மத்திய அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பணியமர்த்தப்படும் ஊழியர்கள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஓட்டு இருப்பவராகவோ, வேலை பார்ப்பவராகவோ, வசிப்பவராகவோ இருக்க கூடாது.
மேலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் புதிதாக வருகிறது. இன்னும் 2 நாட்களுக்குள் அனைத்து வாக்கு பதிவு இயந்திரங்களும் வந்து சேரும். வாக்கு பதிவு நாளான அடுத்த மாதம் 18ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்றார்.