ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் எரித்து அழிப்பு
நாங்குநேரி: நாங்குநேரி அருகே பல்வேறு வழக்குகளில் கைப்பற்ற ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் எரிக்கப்பட்டது.
தமிழகத்தில் திருச்சி சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உட்பட்ட தூத்துக்குடி, நாகர்கோவி்ல், உள்பட பல்வேறு பகுதிகளில் 1990 முதல் 2005 வரை பல்வேறு போதை பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் 4 வழக்குகளில் 98 கிலோ ஹெராயின், 2 வழக்குகளில் 1492 கிலோ மான்ட்ராக்ஸ் மாத்திரைகள், ஒரு வழக்கில் 15 கிலோ ஹசீஸ், 6 வழக்குகளில் 285 கிலோ கஞ்சா ஆகியவை சுங்கத்துறை கடத்தல் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். மொத்தம் 1890 கிலோ மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் நாங்குநேரி அருகே உள்ள தொழிற்சாலையில் திருச்சி சுங்கத்துறை ஆணையர் ராஜன் முன்னிலையில் எரித்து அழிக்கப்பட்டன.
இதுகுறித்து ராஜன் கூறுகையில், அழிக்கப்பட்ட போதை பொருட்களின் இந்திய மதிப்பு ரூ.5.16 கோடி. சர்வதேச மதிப்பு ரூ.51 கோடி என்றார்.