இலங்கைக்கு 2.6 பில்லியன் டாலர் கடன் - ஐஎம்எப் ஒப்புதல்
வாஷிங்டன்: இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு உதவ 2.6 பில்லியன் டாலர் கடனுதவியை வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) ஒப்புதல் அளித்து விட்டது.
இதுதொடர்பாக கூடிய சர்வதேச நிதியத்தின் போர்டு கூட்டத்தில் இலங்கைக்கு 2.6 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக 322.2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி உடனடியாக அளிக்கப்படும்.
மீதமுள்ள நிதி ஒவ்வொரு காலாண்டாக அளிக்கப்படும். அதற்கு முன்பு முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என ஐஎம்எப் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்த இனப் போரின் முடிவுக்குப் பின்னர் இலங்கைக்கு மிகப் பெரிய அளவில் சர்வதேச கடன் உதவி கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிதியை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனால் கடன் கிடைப்பது சந்தேகத்திற்கிடமானது.
இருப்பினும் அமெரிக்கா திடீரென பல்டி அடித்து விட்டதால் அதன் ஒப்புதல் கிடைத்து இப்போது இலங்கைக்கு இவ்வளவு பெரிய தொகை கடனாக கிடைத்துள்ளது.