திமுக, காங் வேட்பாளர்கள் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல்
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் 29ம் தேதி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. 29ம் தேதியுடன் மனு தாக்கல் முடிகிறது.
இத்தேர்தலில் திமுக சார்பில் கம்பத்தில் ராமகிருஷ்ணன், இளையாங்குடியில் சுப.மதியரசன், பர்கூரில் கே.ஆர்.கே.நரசிம்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நாளை அறிவிக்கவுள்ளது. இதையடுத்து ஐந்து வேட்பாளர்களும் ஒரே நாளில், 29ம் தேதியன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
பர்கூர் தி.மு.க. வேட்பாளர் நரசிம்மன் 29-ந் தேதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் பர்கூரில் இருந்து ஊர்வலமாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு மாவட்ட வருவாய் அதிகாரியும், தேர்தல் அதிகாரியுமான சண்முக சுந்தரத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகள் இந்த இடைத் தேர்தலை தனியாக சந்திக்கின்றனர். ஸ்ரீவைகுண்டம், பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தொண்டாமுத்தூர், கம்பத்தில் மார்க்சிஸ்ட்டும் போட்டியிடுகின்றன.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக தனலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். பர்கூர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுகிறார்.
சிபிஎம் தான் போட்டியிடும் இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் நேற்று மாலை அறிவித்தது.
அதேபோல ஐந்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை தேமுதிகவும் அறிவித்துள்ளது.
பாஜக
பாஜக இன்னும் தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இக்கட்சி ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.