லாலுவின் ஏழைகள் ரதம்-ஏற ஆளி்ல்லை!!
டெல்லி: கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அறிமுகப்படுத்திய கரீப் ரத் எனப்படும் ஏழைகள் ரயில்களுக்கு போதிய வரவேற்பு இல்லை என்று இந்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.
2008-09-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை இதுகுறித்து கூறுவதாவது:
கடந்த ரயில்வே அமைச்சகம் சார்பில், நாட்டில் மொத்தம் 11 மார்க்கங்களில் ஏழைகள் ரதம் அறிமுகம் செய்யப்பட்டது.
குளிர்பதன வசதி செய்யப்பட்ட ரயில்களிலும் மிகக் குறைந்த கட்டணத்தில் ஏழைகள் பயணம் செய்வதற்கு வசதியாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ரயில் கட்டணத்தில் மானியம் வழங்கப்பட்டது.
ஆனால் தகவல் பரிமாற்றத்தில் உள்ள இடைவெளி காரணமாக இந்த ரயில்களை இயக்கியதில் அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஒருசில ரயில்களில் 8 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளே பயணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா - பாட்னா ரயிலில் கூட்டமே இல்லை..
உதாரணத்துக்கு கடந்த 2007-08-ம் ஆண்டில் கொல்கத்தா -பாட்னா இடையே செல்லும் ஏழைகள் ரத ரயிலில் இருக்கை வசதி பெட்டியில் 8 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொண்டுள்ளனர். ஏசி மூன்றடுக்கு பெட்டியில் 22 சதவீதம் பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.
அதேபோல் ராய்ப்பூர் மற்றும் லக்னௌ இடையேயான ரயிலில் 32 சதவீதம் பேர் மட்டும் பயணம் செய்துள்ளனர்.
இதனால் மொத்தம் உள்ள 11 ஏழைகள் ரத ரயில்களில் 8 ரயில்கள் நஷ்டத்தில் இயக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
லாபம் என டுபாக்கூர் விட்ட லாலு...
ஆனால் இந்த ரயில்கள் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிட்டியுள்ளதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ள தகவல் ஆச்சரியத்தை அளிக்கிறது.
மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ரயில்கள் பற்றியோ அல்லது கூடுதலாக இணைக்கப்படும் பெட்டிகள் குறித்த அறிவிப்பையோ பயணிகள் முன்பதிவு முறையில் உரிய நேரத்தில் சேர்க்கப்படாததால் இதுகுறித்த தகவல் மக்களுக்கு சென்றவடைதில்லை. இதனால் இந்த ரயில்கள் மிகக் குறைந்த பயணிகளுடன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
காற்று வாங்கிய பாப்புலர் எக்ஸ்பிரஸ்..
உதாரணத்துக்கு பிகாரில் இயக்கப்படும் பாப்புலர் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள ஏசி பெட்டி குறித்த அறிவிப்பும், தகவலும் முன்பதிவு முறையில் இல்லாததால் சுமார் இரண்டரை ஆண்டுகளாக பயணிகள் யாரும் இன்றி வெறுமனே சென்றுவந்துள்ளது.
அதேபோல் தனபூர் -ராஜ்கிர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ரயில் குறித்த பயணிகள் முன்பதிவு வசதியில் 2007-ம் ஆண்டுதான் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அறிவிப்பு ஏதும் இல்லாததால் ரயில்வேக்கு ரூ.72 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு ரயில்வே மற்றும் தென்மேற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்திய புதிய ரயில்கள் குறித்த தகவல் பயணிகள் முன்பதிவு வசதியில் சேர்ப்பதற்கு மூன்று மாதங்கள் ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துதான் மமதா பானர்ஜி தாக்கல் செய்த இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டின்போது ஏழைகள் ரத ரயில் புதிதாக ஏதும் அறிமுகம் செய்யப்படவில்லை.
லாலுவின் நிர்வாகத் திறமையை நாடே அப்போது வியந்து பாராட்டியது. ஆனால் உள்ளே நோண்ட நோண்ட ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பது படிப்படியாக வெளியாகி வருகிறது.












Click it and Unblock the Notifications