உறவினருக்காக சிறுமியைக் கடத்திய பெண் கைது
சென்னை: குழந்தை இல்லாத உறவுப் பெண்ணுக்காக 4 வயது சிறுமியைக் கடத்திய வேலைக்காரப் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சாலமன். இவரது மனைவி பிரசன்ன குமாரி. இவர்களுக்கு 4 வயதில் ஆஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
அப்பகுதியில் உள்ள பால்வாடி பள்ளி கூடத்தில் தினமும் ஆஷாவை பிரசன்னகுமாரி கொண்டுபோய் விடுவது வழக்கம். மாலையில் அங்கு பணிபுரியும் ஆயா கதிரொளி ஆஷாவை வீட்டுக்கு அழைத்து வருவார்.
நேற்று முன்தினம் மாலையில் கதிரொளி, குழந்தை ஆஷாவை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நான் ஆஷாவின் உறவினர் என்றும் ஆஷாவை வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி கடத்தி சென்று விட்டார். இந்த சம்பவத்தால் சென்னை ஓட்டேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஓட்டேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஆஷா கடத்தப்பட்ட செய்தி படத்துடன் அனைத்து பத்திரிகைகளிலும், டி.வி.களிலும் வெளியானது.
இந்த செய்தியை பார்த்து, செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாயல் கிராமத்தில் குழந்தை ஆஷாவோடு பெண் ஒருவர் சுற்றிக் கொண்டிருப்பதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து செங்கல்பட்டு போலீசார் ஆஷாவோடு சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் குழந்தையை கடத்திய பெண்ணின் பெயர் ரேகா (22). சாலவாயலை சேர்ந்தவர். சென்னை கொடுங்கையூரில் தனது காதலனோடு வசித்து வந்தார் என்பது தெரிய வந்தது.
போலீஸாரிடம் ரேகா கொடுத்த வாக்குமூலத்தில், எனக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. எனது கணவர் திருட்டு வழக்கில் கைதாகி அடிக்கடி ஜெயிலுக்கு போய் விடுவார். எனது மாமா பாஸ்கர் அத்தை சுந்தரி ஆகியோருக்கு திருமணம் நடந்து 20 ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால் குழந்தை இல்லை. இதனால் என்னிடம் ரூ.8 ஆயிரம் கொடுத்து தத்து எடுத்து வளர்ப்பதற்கு நல்ல குழந்தைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார்கள்.
அப்போதுதான் குழந்தை ஆஷா எனது கண்ணில் பட்டாள். ஆஷாவை கடத்தி செல்ல திட்டமிட்டேன். பிஸ்கட், சாக்லெட் வாங்கி கொடுத்து அவளிடம் அன்பாக பழகினேன். சம்பவத்தன்று சாக்லெட் தருகிறேன், வா என்று அழைத்தேன். அவளும் வந்து விட்டாள்.
இந்த நேரத்தில் ஆயா கதிரொளி அங்கு வந்தார். அவரிடம் நான் ஆஷாவின் உறவுக்காரி என்றும், குழந்தையை நான் வீட்டில் விட்டு விடுகிறேன் என்றும் தெரிவித்தேன். ஆஷாவும் என்னோடு அன்பாக வந்ததால் கதிரொளிக்கு சந்தேகம் ஏற்படவில்லை.
குழந்தைக்கு இரவு நன்றாக சாப்பாடு வாங்கி கொடுத்தேன். அப்பா, அம்மாவிடம் போக வேண்டும் என்று ஆஷா அழுதாள். காலையில் அப்பாவும், அம்மாவும் இங்கு வருவார்கள் என்று சமாதானம் சொல்லி அவளை தூங்க வைத்தேன் அதற்குள் போலீஸார் பிடித்து விட்டனர் என்றார்.
போலீஸார் தற்போது பாஸ்கர், சுந்தரி ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.