இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால் கூட்டணியில் பிளவு வராது - ஜி.கே.மணி
சேலம்: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் கூட்டணியில் பிளவு ஏதும் ஏற்படாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
சேலம் வந்த ஜி.கே.மணி, அங்கு பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தற்போது நடக்கும் 5 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவது என்று முடிவு செய்து அறிவித்துள்ளன.
தமிழகத்தில் பா.ம.க. அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சட்டமன்ற இடைத்தேர்தல்களை புறக்கணிப்பது என்று அ.தி.மு.க. முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஏற்கனவே பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாசும் தேர்தலில் போட்டியிடுவதால் யாருக்கும் எந்த லாபமும் கிடையாது. பாராளுமன்ற தேர்தல் மற்றும் திருமங்கலம் இடைத்தேர்தலில் நடந்தது போன்றுத்தான் இந்த இடைத்தேர்தலிலும் நடக்கும வாய்ப்பு உள்ளது என்று கூறிஉள்ளார்.
ஆனால் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்து உள்ளது. அவர்களின் இந்த முடிவு குறித்து கூட்டணியின் தலைமையுடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். அவர்களின் இந்த முடிவால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
தமிழ்நாட்டில் பாசன திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு இன்னமும் போதிய கவனம் செலுத்தவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் குறைவாக உள்ளது என்றார் மணி.












Click it and Unblock the Notifications