ஆஸி.யில் இந்திய பெண் நிருபர் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் சமீப காலமாக இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கல்வி நிறுவனங்களும், புரோக்கர்களும் நடத்தி வரும் மிகப் பெரிய கல்வி ஊழலை அம்பலப்படுத்தும் ஸ்டிங் நிகழ்ச்சி ஒன்றை ஆஸ்திரேலியாவின் ஏபிசி டிவி நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு புரோக்கர்களையும், இந்திய மாணவ, மாணவிகளையும் சந்தித்து பேட்டி எடுத்தார் இந்தியாவைச் சேர்ந்த பெண் நிருபர் ஒருவர்.
இந்த நிகழ்ச்சி இன்று இரவு ஏபிசி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண் நிருபரை ஒரு கும்பல் தாக்கி காயப்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் பெயர் போர் கார்னர்ஸ். அந்த நிகழ்ச்சியில், ஆங்கிலமே தெரியாத ஒருவர், ஆங்கிலம் தெரியும் என்பதாக எப்படி போலி சான்றிதழைப் பெற முடியும், வேலையே பார்க்காமல் எப்படி வேலை பார்த்ததற்கான போலி சான்றிதழைப் பெற முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை அந்த பெண் நிருபர் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
இதற்காக இரண்டு மைக்ரேஷன் ஏஜென்டுகளை அணுகிய அந்தப் பெண் இந்த சான்றிதழ்களைப் பெற வேண்டும் என்று கோருகிறார். அதற்கு அந்த ஏஜென்டுகள் ஆங்கில சான்றிதழ் பெற 3000 டாலரும், வேலை சான்றிதழ் பெற 5000 டாலர் கொடுத்தால் காரியம் முடியும் என்று கூறுகின்றனர்.
இதேபோல, எப்படியெல்லாம் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களும், அவர்களின் ஏஜென்டுகளும் வெளிநாட்டு மாணவ, மாணவியரை குறிப்பாக இந்தியர்களை ஏமாற்றிப் பணத்தைக் கறக்கிறார்கள் என்பதையும் தனது நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில்தான் அந்த நிருபர் தாக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை ஏபிசி டிவி வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications