ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கு 1% வட்டி குறைப்பு

2009ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீது மக்களவையில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் கூறுகையில்,
ஏழைகளும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வீடு கட்டுவதை ஊக்குவிக்க வேண்டும். இதற்காக வட்டிக்கு இந்த ஓராண்டு மட்டும் மானியம் வழங்கப்படும்.
பத்து லட்ச ரூபாய் வரையில் உள்ள கடன்களுக்கு மட்டும் இந்த மானியம் பொருந்தும், வீட்டின் மதிப்பு 20 லட்ச ரூபாய்க்கு மேல் போகக்கூடாது. அதாவது ரூ. 20 லட்சம் மதிப்புள்ள கடனில் ரூ. 10 லட்சத்துக்கான கடனுக்கான வட்டியில் 1 சதவீதத்தை அரசே மானியமாக வழங்கும். இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.
இந்த வட்டி மானியம் அரசுடைமை வங்கிகளில் வாங்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கும், தேசிய வீடமைப்பு வங்கிகளிடம் பதிவு செய்து கடன் வழங்கும் வீட்டுவசதி நிறுவனங்கள் தரும் கடன்களுக்கும் பொருந்தும்.
2007 ஏப்ரல் 1 முதல் 2008 மார்ச் 31 வரைக்குமான காலத்தில் தொடங்கப்பட்ட வீடு கட்டும் திட்டங்கள், 2012 மார்ச் 31க்குள் முடிக்கப்படுமானால் அவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். வீடு கட்டுவோர் இந்தச் சலுகையை அப்படியே வீடு வாங்குவோருக்கு, வீட்டின் விலையைக் குறைத்து வழங்க வேண்டும்.
இந்த சலுகைகள், வீடு வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், ரியல் எஸ்டேட் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் என்று நம்புகிறேன்.
மிகக் கடுமையாக உடல் ஊனமுற்றவர்களுக்கு வருமான வரி விதிப்பதற்கான விலக்கு இப்போது ரூ.75,000 ஆக உள்ளது. இது இனி இனி ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.
இறைச்சி, கோழி, மீன் ஆகியவற்றைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, உள்நாட்டிலேயே விற்பது ஆகியவற்றில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும், பால் பண்ணைத் தொழிலுக்கும் வரிச் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
மத்திய அரசு இதுவரை ரூ.2.14 லட்சம் கோடிக்கு அளித்துள்ள சலுகைகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன. சிமெண்ட், கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளன. உற்பத்தி துறையின் செயல்பாடு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
பொருளாதாரம் குறித்து யாரும் பீதி அடைய தேவையில்லை. அடுத்த ஆண்டு இறுதிக்குள், 8 முதல் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும். அதற்கு முதல்கட்டமாக, வேளாண்மைத் துறையில் 4 சதவீத வளர்ச்சி எட்டப்பட வேண்டும். அதற்காக, தண்ணீர், பூச்சி மருந்து, உரம், கடன் ஆகியவை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார் முகர்ஜி.












Click it and Unblock the Notifications