மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
மேட்டூர்: காவிரி படுகைப் பகுதி பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று மாலை திறக்கப்பட்டது.
அணையிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 12,000 கன அடியாக உயர்த்தப்படும்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறந்து விடப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதில் தாமதம் நிலவுகிறது.
அணையில் போதிய தண்ணீர் இல்லாததும், கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததுமே இதற்குக் காரணம்.
இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி விட்டன.
இதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபிணி அணையிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்ட்டு வருகிறது.
இந்தத் தண்ணீரின் வரத்தால், மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 94 அடியைத் தாண்டியுள்ளது.
ஏற்கனவே அணை இன்று திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி இன்று அணை திறக்கப்பட்டது.
இன்று மாலை அணையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அணையைத் திறந்து வைத்தார்.
தொடக்கத்தில் விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 12,000 கன அடியாக உயர்த்தப்படும்.
அடுத்த மாதம் திறக்கப்படுவதாக இருந்த அணை, ஆடிப் பெருக்கு விழாவையொட்டி நாளையே திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 19 ஆண்டுகளில் மேட்டூர் அணை 8 முறை மட்டுமே ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது.
1991ல் ஜூலை 21, 1995ல் ஜூலை 3, 1996ல் ஜூலை 26, 1998ல் ஜூன் 20, 1999ல் ஜூலை 1, 2002ல் செப்டம்பர் 6, 2003ல் அக்டோபர் 7, 2004ல் ஆகஸ்ட் 12, 2005ல் ஆகஸ்ட் 4, 2007ல் ஜூலை 18 தேதிகளில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டில் இன்று திறக்கப்படுகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு கர்நாடகா ஆண்டுதோறும் 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் 203.81 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் நேற்று வரை 47.57 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்க வேண்டும். 41.66 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீசைலம் அணை நிரம்புகிறது...
இதற்கிடையே சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
கடந்த மாதம் இந்த அணை வறண்டு போனது. இந்நிலையில் கர்நாடகம், மராட்டியத்தில் கிருஷ்ணா, துங்கபத்ரா நதிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வார காலமாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் ஸ்ரீசலைம் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணை ஓரிரு வாரத்தில் நிரம்பி விடும் என்று ஆந்திர நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீ்ர் கண்டலேறு அணைக்குச் சென்று அங்கிருந்து புழல் ஏரியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.