திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து - மக்கள் ஓட்டம்
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க வந்து இருந்ததால் கூட்டமாக இருந்தது.
அப்போது முற்பகல் 11 மணியளவில் அலுவலகத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள ஜெனரேட்டர் அறையிலிருந்து வயர்கள் தீயில் கருகிய வாசம் வந்தது. மேலும் புகையும் வெளியேறியது.
இதையடுத்து உடனடியாக மின்சார ஸ்விட்ச்சுகள் அணைக்கப்பட்டன. மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மின்சார வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி, அந்த அழுத்தத்தால் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது. கலெக்டர் அலுவலக ஊழியர்களின் உடனடி நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் மரத்தடியில் வைத்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.