பர்கூர் சிபிஐ வேட்பாளராக எஸ்.கண்ணு அறிவிப்பு
அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடும் இடதுசாரி கட்சிகள் (சிபிஐ, சிபிஎம்) ஸ்ரீவைகுண்டம், கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இதில் சிபிஐ கட்சிக்கு ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக ஏற்கனவே தனலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பர்கூரில் எஸ்.கண்ணு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு கூட்டம் பர்கூரில் நேற்று நடந்தது. இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். கண்ணுவை பர்கூர் தொகுதியில் போட்டியிடச் செய்வது என முடிவு செய்யப் பட்டது.
64 வயதான கண்ணு, எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர். பர்கூர் அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர். கட்சியின் முழுநேர ஊழியர். 1969ம் ஆண்டில் இருந்து கட்சி உறுப்பினராக உள்ளார். மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
இளையாங்குடி...?
இதற்கிடையே, இளையாங்குடியில் நட்பு கட்சி ஒன்றுக்கு ஆதரவு தரப் போவதாக அறிவித்திருந்தது சிபிஎம், சிபிஐ கட்சிகள். ஆனால் தற்போது யாரும் கூட்டு சேர முன்வராததால் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதா அல்லது என்ன செய்வது என்பது குறித்து என்று இரு கட்சிகளும் இன்று முடிவு செய்யவுள்ளன.