தபால்துறையின் விமான சேவை சென்னைக்கும் நீட்டிப்பு
சென்னை: வட கிழக்கு பிராந்தியத்தில் கிடைத்துள்ள வெற்றியைத் தொடர்ந்து தபால் துறையின், விமான தபால் சேவை சென்னை, பெங்களூர், மும்பை, நாக்பூர், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், மேற்கு, தெற்கு, கிழக்குப் பிராந்தியங்களில் உள்ளடங்கியுள்ள இந்த நகரங்களுக்கு தலா ஒரு தபால் விமானம் இயக்கப்படும்.
மும்பை -நாக்பூர் - மும்பை, பெங்களூர் -சென்னை - நாக்பூர் - சென்னை - பெங்களூர், கொல்கத்தா - டெல்லி நாக்பூர் - டெல்லி - கொல்கத்தா ஆகிய மூன்று மார்க்கங்களில் தபால்துறையின் விமானங்கள் இயக்கப்படும்.
இதில் நாக்பூர் ஹப் மையமாக செயல்படும். மற்ற நகரங்களுக்கான விமான சேவையை இது கையாளும்.
சென்னையில் செயல்படும் ஹப் பிரிவு, தானியங்கி முறையில் தபால்களை பிரித்து எடுத்து அனுப்பும். மீனம்பாக்கம் பழைய விமான நிலைய வளாகத்தில் இதன் அலுவலகம் அமைக்கப்படுகிறது.
சென்னை அண்ணா சாலை வர்த்தக தபால் மையம், சென்னை பதிவு கண்காணிப்பு மையம், சென்னை பொது தலைமை தபால் நிலையம், ஸ்பீட் போஸ்ட் கண்காணிப்பு மையம் ஆகியவை தபால்களைப் பெற்று மீனம்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கும்.
அங்கிருந்து சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு விமானம் மூலம் தபால்கள் அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் தபால்கள் அனைத்தும் மதுரை, திருச்சி, கோவையில் பெறப்பட்டு அங்கிருந்து சென்னை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னையிலிருந்து தினசரி முற்பகல் 11.30 மணிக்கு நாக்பூர் வழியாக அனைத்து இடங்களுக்கும் தபால்கள் விமானம் மூலம் சேர்க்கப்படும்.
அதேபோல நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் தபால்கள் தினசரி மாலை 4 மணிக்கு சென்னை வந்து சேரும். அங்கிருந்து பிற ஊர்களுக்கு மதுரை, திருச்சி, கோவை வழியாக அனுப்பி வைக்கப்படும்.