தமிழகத்தில் மேலும் 2 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்
சென்னை: தமிழகத்தில் இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
மதுராந்தகத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி தொடங்கியுள்ள கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, திருச்சி அருகே அமைந்துள்ள சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இந்தக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 162 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். இந்த இடங்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாவது கட்ட கவுன்சலிங்கின்போது நிரப்பப்படவுள்ளன.
அதே நேரத்தில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் இன்னும் அனுமதி தரவில்லை. இதனால் அங்கு மாணவர் சேர்க்கை தொடர்பான அனுமதியில் இழுபறி நீடிக்கிறது.
கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டில் மொத்தம் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்தக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.
அதே போல சென்னை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டில் மொத்தம் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 97 இடங்கள் கிடைக்கும்.