பாளை. சிறையில் பெண்களிடம் காவலர்கள் சில்மிஷம்
பாளையங்கோட்டை: நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள கைதிகளைப் பார்க்க வரும் அவர்களது உறவுக்காரப் பெண்களிடம், சிறைக் காவலர்கள், சோதனை என்ற பெயரி்ல் செக்ஸ் சில்மிஷத்தி்ல ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலியே பயிரை மேய்ந்தது என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. பல இடங்களில் இது தொடர் கதையாகவே உள்ளது.
குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டியவர்களே அந்தக் குற்றங்களில் ஈடுபடுவது படு சாதாரணமாகி விட்டது.
இந்த நிலையில் சிறைக் கைதிகளைப் பார்க்க வரும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடம் சோதனை என்ற பெயரில் ஆண் காவலர்கள் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை, தடா தடுப்பு காவல் சிறைவாசிகள் என 1450க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் (கைதிகள்) அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை அலுவலக வேலை நாட்களில் அவர்களின் உறவினர்கள் நேர்காணல் முறையில் பார்த்து நலம் விசாரிப்பதுடன் சிறைவாசிகளுக்கு சிறை விதிகளின்படி பழம், ரொட்டி, பிஸ்கட் போன்ற அனுமதிக்கப்பட்ட பொருட்களை கொண்டு வந்து கொடுத்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.
அவ்வாறு பார்வையாளர்களாக வருகின்ற இளம் பெண்களை சோதனை என்ற பெயரில் சிறையின் சிறப்பு காவலர்கள் உடலைத் தொடுவது, கையைப் பிடிப்பது, கண்ட இடங்களில் கை வைப்பது என சில்மிஷம் செய்கிறார்களாம்.
சிறைவாசிகளை பார்க்க வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் ஆண் பார்வையாளர்களை ஆண் காவலர்களும், பெண் பார்வையாளர்களை பெண் காவலர்களும் சோதனை செய்ய வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் அதற்கு மாறாக சிறப்பு காவலர்கள் செய்வதாக கூறப்படும் இத்தகைய அருவருக்கத்தக்க செயல்களை கண்டும் பல இளம் பெண்கள் வேறு வழியில்லாமல் அதிகாரத்திற்கு பயந்து பொறுத்துக் கொண்டு போகிறார்களாம்.
இந்த தகாத செயல்களுக்கு சிறையில் உள்ள உளவுப்பிரிவு காவலர் ஆதரவாக இருக்கிறாராம். இவரும், இன்னொரு காவலரும் பெண்களை இவ்வாறு தகாத முறையில் பாலியல் தொந்தரவுகள் செய்வதை கண்டு அங்கு பணியாற்றுவதைப் பார்த்து நேர்மையான காவலர்கள் மனதுக்குள் புழுங்குகின்றனராம்.
பாலியல் சில்மிஷத்தோடு நிற்காமல், கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை கைதிகளுக்கு கடத்தவும் இவர்கள் முழு ஆதரவு தருகிறார்களாம். அதற்குரிய தொகை மட்டும் கரெக்டாக வந்து விட வேண்டுமாம்.
இந்த காவலர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications