அட்வகேட் ஜெனரல் ராஜினாமா ஏன்?-ராமதாஸ்
சென்னை: தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி ராஜினாமா செய்துள்ளதையடுத்து பி.எஸ். ராமன் புதிய அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உடல் நிலையைக் காரணம் காட்டி மாசிலாமணி ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை அரசு ஏற்றுக கொண்டுள்ளது. அவருக்குப் பதில் புதிய அட்வகேட் ஜெனரலாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக அரசு 2006ம் ஆண்டு பதவிக்கு வந்தவுடன் மாசிலாமணி அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
புதிய அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், 1997 முதல் 80 வரையிலான எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில், அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றிய வி.பி.ராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?-ராமதாஸ்:
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,
மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் தற்போது பதவி விலகியிருக்கிறார். 2006ம் ஆண்டு மே மாதத்தில் திமுக அரசு பதவியேற்றவுடன் ஆர்.விடுதலை தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்றார். 18 மாதத்தில் அவர் பதவி விலகினார்.
பிறகு மாசிலாமணி அரசின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்றார். 20 மாதத்தில் அவரும் பதவி விலகியிருக்கிறார். 3வதாக பி.எஸ். ராமன் புதிய தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்றிருக்கிறார். 3 ஆண்டில் 3 தலைமை வழக்கறிஞர்கள் பதவியேற்றது சாதனையா? அல்லது வேதனையா? என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
கடலூர் சிப்காட் வளாகத்தில் நிறுவப்பட்டு வரும் தொழிற்சாலையும் மற்றொரு போட்டி தொழிற்சாலையும் மோதிக் கொண்டதில் வெடித்துக் கிளம்பிய விவகாரம்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா? இல்லையா? என்பதை அரசும், முதல்வரும் விளக்க வேண்டும் என்றார்.