சென்னையில் புது ட்ரெண்ட்: பழைய வீட்டுக்கு புதுவீடு!
சென்னை: பழைய நகையைக் கொடுத்து புது நகை வாங்குவதைப் பார்த்திருப்பீர்கள்... பழைய கார் கொடுத்துவிட்டு புதுக்கார் வாங்குவதைப் பார்த்திருப்பீர்கள்.
பழைய வீட்டைக் கொடுத்துவிட்டு புதிய வீடு வாங்கிப் பார்த்திருக்கிறீர்களா...?
இனி பார்ப்பீர்கள்... அதுவும் நம்ம சிங்காரச் சென்னையிலேயே!
எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி அருண் எக்ஸெல்லோ ரியல்டி, இந்த வேலையில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, முதியவர்கள் தங்கள் பழைய வீடு அல்லது ப்ளாட்டைக் கொடுத்துவிட்டு, எல் அண்ட்டி அருண் எக்ஸெல்லோ உருவாக்கியுள்ள புதிய குடியிருப்பில் ஒரு ப்ளாட்டை வாங்கிக் கொள்ளலாம்.
முதியோர்கள் வீட்டுக் கடன் பெறமுடியாது. அதே நேரம் புதிய வீட்டில் குடியேறும் ஆசையையும் விட முடியாது. இவர்களுக்காகவே இந்தத் திட்டம் என்கிறார் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ்.
இதற்காக ஜோன்ஸ் லங் லாசல்லே மேக்ராஜ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது எல் அண்ட் டி அருண்.
இந்த திட்டம் பற்றி சுரேஷ் இப்படிச் சொல்கிறார்:
இன்றைய நகர வாழ்க்கையில் மூத்த குடிமக்களுக்காக தனியான அமைதியான குடியிருப்புகள் அமைவது மகா கஷ்டம். தங்கள் பிள்ளைகளின் நலனுக்காகவே பல ஆண்டுகளை பரபரப்பில் கழித்துவிட்ட அவர்கள் தங்கள் இறுதிக் காலத்தில் நிம்மதியாகக் கழிக்க ஒரு அருமையான குடியிருப்பை உருவாக்க முயன்றோம். அதுதான் எஸ்டான்ஷியா.
சென்னை விமான நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு மூத்த குடிமக்கள் தனியாக வசிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஒரு தனி சமூகமாகவே வாழலாம். தங்கள் பிள்ளைகளோடு வசிக்க விருப்பப்பட்டாலும் பிரச்சினையில்லை.
மொத்தம் மூன்று குடியிருப்பு பகுதிகளை மூத்த குடிமக்களுக்காகவே உருவாக்கியுள்ளோம். இவை தவிர பொது வாடிக்கையாளர்களுக்கு 2000 வீடுகள் உள்ளன.
அனைத்து வசதிகளும் இந்த வளாகத்துக்குள் உள்ளது, என்கிறார் சுரேஷ். ஒரு வீட்டின் விலை ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை. எஸ்ஆர்எம் கல்லூரி வளாகத்துக்கு அருகில் உள்ளது இந்த இடம்.
எக்ஸ்சேஞ்ச் வசதியை பயன்படுத்த விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் பழைய வீடு அல்லது சொத்துக்களை விற்று பணத்தைப் பெற்றுத் தருகிறார்களாம். புதிய வீட்டுக்குத் தேவையான தொகையை எடுத்துக் கொண்டு மீதியை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்களாம். ஆவணங்கள் அனைத்தும் பக்காவாக செய்துவிடுவதாகவும் உறுதி கூறுகிறார் சுரேஷ்.
இதுகுறித்து ஜோன்ஸ் லங் லாசல்லே மேக்ராஜ் நிறுவனத்தின் ரமேஷ் நாயர் கூறியதாவது:
எங்கள் துணை நிறுவனமான ஹோம்பே மூலம், வாடிக்கையாளரின் பழைய சொத்து மதிப்பை நிர்ணயித்து, சந்தையில் அதிகபட்ச விலைக்கு விற்றுத் தருவோம். இந்தத் தொகையை அவர்களே எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது எங்களிடம் வீடு வாங்கிக் கொண்டாலும் சரி, என்றார்.