For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்ஆர்எப் தொழிலாளர்கள் மீது தடியடி; 60 பேர் கைது!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் எம்.ஆர்.எஃப். தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அதன் தொழிலாளர்களை தடியால் அடித்து விரட்டினர் போலீசார். இவர்களில் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணத்தில் உள்ள எம்ஆர்எப் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கினர். ஆனால் அதனை எம்ஆர்எப் நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை.

எனவே தங்கள் தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்பே போராட்டங்களை ஆரம்பித்தனர் தொழிலாளர்கள்.

அதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை மன்றோ சிலை அருகில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணியாகச் சென்றனர். பேரணியில் பங்கேற்காத ஒரு பிரிவினர் மட்டும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்தனர். உடனடியாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

தொழிலாளர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். அவர்களில் 60 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

டன்லப் அடுத்த மாதம் திறப்பு!

மூடப்பட்டுள்ள அம்பத்தூர் டன்லப் டயர் தயாரிப்பு தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுகிறது. அடுத்தமாதம் முதல் இந்தத் தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கும் என தமிழக அரசின் தொழிலாளர் ஆணாயர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக மூடப்ப்டிருந்தது. பின்னர் ரூயா குழுமம் இந்த நிறுவனத்தை வாங்கி நடத்த ஆரம்பித்தது. ஆனால் மீண்டும் பிரச்சினை எழவே மூடப்பட்டது.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முயற்சியால், டன்லப் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தை 2 மாதங்களாக நடைபெற்று வந்தது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் முன்னாள் எம்.பி. ஏ. கிருஷ்ணசாமி மற்றும் டன்லப் செயல் இயக்குநர் தாமோதர் பிரசாத் தானி முன்னிலையில் நேற்று சென்னையில் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதிய ஒப்பந்தத்தின்படி, 31.8.2009-க்குள் மீண்டும் ஆலை திறக்கப்படும். தொழிலாளர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் ஊதிய உயர்வு அளிக்கப்படும். ஆலை திறக்கப்படுவதை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

மூடப்பட்ட ஆலை மீண்டும் திறக்கப்படுவதால் இதுநாள் வரை வேலையின்றி இருந்த சுமார் 700 தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலையும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

ஆலை திறந்தவுடன் உடனடியாக 40 டன் உற்பத்தியை தொடங்கும். படிப்படியாக ஆறு மாத காலத்துக்குள் ஆலையின் முழு உற்பத்தி திறனான 138 டன்னை எட்டக்கூடும். அப்போது கூடுதலாக 400 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X