பர்கூரில் வேட்பு மனு நிராகரிப்பு - நரேஷ்குப்தாவிடம் தேமுதிக புகார்
இருப்பினும் இந்தப் பிழையை இந்திய தேர்தல் கமிஷன் திருத்தி எங்கள் மனுவை ஏற்கும் என்று எதிர்பார்ப்பதாக தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பர்கூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட மனு செய்திருந்த சந்திரன் மற்றும் மாற்று வேட்பாளர் ஆகியோரின் விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறி அவற்றை தொகுதி தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்து விட்டார்.
இதனால் அங்கு தேமுதிக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான தேமுதிகவினர் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை நேரில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,
பர்கூர் இடைத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்காக சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு அங்குள்ள தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டு விட்டது.
அதை மறுபரிசீலனை செய்து, தேர்தலில் போட்டியிடும் தகுதியை சந்திரனுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் மனு கொடுத்துள்ளோம்.
வேட்புமனு தாக்கல் செய்யும் போதே திருத்த வேண்டிய சிறிய பிழைகளை திருத்தாமல் வேண்டுமென்றே மவுனமாக இருந்துவிட்டு, கடைசியில் அதை நிராகரித்தது, தேர்தல் விதிகளுக்கும் ஜனநாயகத்துக்கும் முரணானது. இந்தப் பிழையை இந்திய தேர்தல் கமிஷன் திருத்தி எங்கள் மனுவை ஏற்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் பெயர்கள் குறிக்கப்பட்டு இருந்த பாரத்தை வாங்க அந்த அதிகாரி மறுத்துவிட்டார். எனவே மாற்று வேட்பாளருக்கான போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கு யார் மீதும் உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை.
சிறுதவறுகள் ஏற்பட்டால் அவற்றை சரிசெய்யலாம் என்பதற்கு தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. முன்னுதாரணமும் உள்ளது என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
தேமுதிகவின் கோரிக்கை ஏற்கப்படுமா, இல்லையா என்பது குறித்து நாளை தெரிய வரும்.