முற்றிலும் கண்ணாடிகளால் ஆன மலேசியாவின் ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில்!
ஆயிரக்கணக்கான கண்ணாடித் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவில் பார்க்கவே படு பிரமிப்பாக உள்ளது. பளபளப்பாகவும், ஜொலி ஜொலிப்பாகவும் காணப்படும் இந்த வித்தியாசமான கோவில், மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு மாநிலம், ஜலான் தெப்ரு என்ற இடத்தில் உள்ளது.
மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் என்ற பெருமையை இக்கோவில் பெறுகிறது. இந்துக்களை மட்டும் கவராமல், சிறந்த சுற்றுலாத் தளமாகவும் இது உருவாகும் என நம்பப்படுகிறது.
3 மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவில் இந்த கண்ணாடிக் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோவில் மலேசியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் வேறு எங்கும் இல்லை என்கிறார் கோவில் தலைவர் எஸ்.சின்னத்தம்பி.
கோவிலின் சுவர்கள், மேற்கூரை, கோபுரங்கள், தூண்கள் உள்ளிட்டவற்றின் 95 சதவீத பகுதிகளில் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட அழகிய, விலை உயர்ந்த வண்ணக் கண்ணாடித் துண்டுகள் இவை. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கண்ணாடித் துண்டுகளை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனராம்.
கண்ணாடிகளைப் பதிக்கும் பணியில் மியான்மரைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஏழு வண்ணக் கண்ணாடிகளிலிருந்து நாமம், ஸ்ரீ சக்ரா, ஸ்வஸ்திகா ஆகியவற்றை உருவாக்கியுள்ளனர்.
பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் இந்த கண்ணாடிக் கோவில் விரைவில் திறக்கப்படவுள்ளதாம்.













Click it and Unblock the Notifications