மாணவி கன்னத்தில் பளார் - தலைமை ஆசிரியை மீது கலெக்டரிடம் புகார்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பள்ளி மாணவி கன்னத்தில் தலைமை ஆசிரியை அடித்தும், தலைமுடியை பிடித்து இழுத்தும் சித்ரவதை செய்வதாக கலெக்டரிடம் மாணவிகள் திரண்டு வந்து கண்ணீர் மல்க கூறினர்.
கடந்த சில நாட்களாகவே நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியை மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாகவும், அவர்களை அடித்து உதைப்பதும், ஆபாசமாக திட்டுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் திரண்டு நேற்று மாலை பள்ளி விட்டதும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டரின் அறை முன் கூடி நின்றனர். பின்னர் அவர்கள் கூறிய விபரம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.
நேற்று வகுப்பறைக்கு பிளஸ்டூ மாணவி மலர்பிரியா கவரிங் செயின் அணிந்து வந்துள்ளார். நகை எல்லாம் பள்ளிக் கூடத்துக்கு அணி்ந்து வரக்கூடாது என்று கூறிய தலைமை ஆசிரியையிடம், அது கவரிங் என மாணவி கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை அந்த செயினை பிடித்து இழுத்து அறுத்து எறிந்து விட்டு மாணவி மலர் பிரியாவின் கன்னத்தில் பளாரென அறைந்துள்ளார்.
இதனால் கதறி அழுத மலர் பிரியாவை பார்த்த மற்ற மாணவிகள் கலங்கி நின்றனர். அறைபட்டதால் மாணவியின் ஒரு பக்க கன்னம் வீங்கி விட்டது.
பின்னர் அந்த மாணவியின் கூந்தலை பிடித்து இழுத்து அவரை தரையில் போட்டு அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் நேற்று மாலை வகுப்பு விட்டதும் ஆவேசம் அடைந்த மாணவிகள் ஒன்று சேர்ந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications