அரசு மருத்துவமனையில் குழந்தையைக் கடத்த முயன்ற பெண் ஓட்டம்
அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மர்ம பெண் கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பை அருகே சிவந்திபுரம் வராகபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம். விகேபுரத்தில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பட்டம்மாள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
பட்டம்மாள் இரண்டாவது பிரவசத்திற்காக வைரவி குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த செவ்வாய் கிழமை பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்வதற்காக அம்பை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு துணையாக அவரது தாயார் ராசாம்மாள் மருத்துவமனையில் தங்கியிருந்தார்.
நேற்று மாலை 6 மணிக்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பட்டம்மாளிடம் தெரிந்தவர் போல நலம் விசாரித்து கொண்டிருந்தார். பட்டம்மாள் கழிவறைக்கு சென்றபோது அந்த பெண் குழந்தையை கடத்தி கொண்டு வார்டு பகுதியை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்களிடம் முன்னுக்கு பின் பதில் கூறிவிட்டு குழந்தையை மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் அருகே போட்டு விட்டு ஓடிவிட்டார்.
மருத்துவமனை ஊழியர்கள் உஷாராகி விசாரித்ததால் குழந்தை தப்பியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.