16000 புள்ளிகளை தொடும் சென்செக்ஸ்!
மும்பை: கடந்த 14 மாதங்களில் இல்லாத உயர்வைச் சந்தித்துள்ளது இந்தியப் பங்குச் சந்தை நிப்டி.
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் மீட்சியடைந்ததைத் தொடர்ந்து, ஆசிய பங்குச் சந்தைகளிலும் இன்று வர்த்தகம் எடுத்த எடுப்பிலேயே சூடுபிடித்தது.
சென்செக்ஸில் 292 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில் 15962 புள்ளிகளில் நிலை பெற்றது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிப்டியில் 1.85 சதவிகித புள்ளிகள் உயர்ந்தன. வர்த்தக நேர நிறைவில் நிப்டி குறியீட்டெண் 4722 புள்ளிகள் எனக் காட்டியது.
கடந்த 14 மாதங்களில் நிப்டி சந்தித்துள்ள அதிகபட்ச உயர்வு இது.
ஹிண்டால்கோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் 8 சதவிகிதம் வரை உயர்வு கண்டன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பெல், டாடா பவர், டாடா ஸ்டீல் போன்ற நிறுவனப் பங்குகளும் கணிசமாக உயர்வு கண்டன.
இந்துஸ்தான் யூனிலீவர், எச்டிஎப்சி, சுஸ்லான் போன்ற சில பங்குகள் மட்டும் சரிவு கண்டன.