வள்ளுவர் சிலைத் திறப்பை தமிழர் திருவிழாவாகக் கொண்டாட தமிழ்ச் சங்கம் முடிவு
பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை ஒரு வழியாக வருகிற 9ம் தேதி திறப்பு விழா காண்கிறது.
சிலை திறப்புக்கு ஒரு காலத்தில் இடையூறாக இருந்து வந்ததாக கூறப்பட்ட கர்நாடக அரசே இப்போது விழாவை ஏற்று நடத்துகிறது. அதாவது அரசு விழாவாக இது நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இந்த விழாவை, தமிழர் விழாவாக கோலாகலமாக கொண்டாட பெங்களூர் தமிழ்ச் சங்கம் திட்டமிட்டுள்ளது.
சிலை சிறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று தமிழ்ச் சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழ்ச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சங்க செயலாளர் கோ. தாமோதரன், துணைத்தலைவர் விவேகானந்தன், பொருளாளர் சம்பத், முன்னாள் தலைவர் இராசு.மாறன், காங்கிரஸ் கட்சியின் நகர மாவட்ட தலைவர் ஜெயகுமரேசன், முன்னாள் கவுன்சிலர் டி.ஏ.சரவணா, பெங்களூர் மக்கள் நலச்சங்க தலைவர் செந்தில்குமார், ரஜினி சேவா சமிதி தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விழா ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் திருவள்ளுவர் சிலை திறப்பு நமக்கு கிடைத்த இமாலய வெற்றி என்றும், இதற்கு முயற்சி எடுத்த தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா மற்றும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்துக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் தமிழ் அமைப்புகளும், தமிழ் பிரமுகர்களும் தானாக முன்வந்து விழா ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில், பலர் நிதியுதவி வழங்கினார்கள்.
பலர் அலங்கார வளைவுகள் செய்து கொடுப்பதாகவும், வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு உணவு வசதி செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
தமிழர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகள் இன்றி ஒன்றுபட்டு சிலை திறப்பு விழாவை தமிழர்களின் வெற்றி விழாவாகவும், தமிழர்களின் திருவிழாவாகவும் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.