சர்ச்சைக்குரிய சிங்கூர் நிலத்தில் ரயில்வே திட்டம் - மமதா விருப்பம்
சிங்கூர் நிலத்தை வைத்துத்தான் மமதாவின் அரசியல் வேகமாக உயர்ந்தது. தனது நானோ கார் தயாரிப்பை சிங்கூரில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதில் வெடித்த விவசாயிகள் பிரச்சினையை கப்பென்று பிடித்துக் கொண்ட மமதா, டாடா நிறுவனத்திற்கு எதிராக மிகக் கடுமையாக போராடினார். இந்தப் போராட்டங்களால் அவருக்கு சிங்கூர் பகுதியில் மட்டுமல்லாது மேற்கு வங்க மாநிலம் முழுவதும் விவசாயிகள், கிராமப்புற மக்களிடையே பெரும் செல்வாக்கு ஏற்பட்டது.
இதை வைத்து லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் களம் இறங்கிய மமதா இடதுசாரிகளுக்கு பெரும் தோல்வியைக் கொடுத்தார்.
இந்த நிலையில் சிங்கூர் இடத்தில், தற்போது ரயில்வே திட்டம் ஒன்றை செயல்படுத்தப் போவதாக மமதா கூறியுள்ளார்.
சிங்கூர் - ஹவுரா புறநகர் ரயில் சேவையை சிங்கூரில் தொடங்கி வைத்தார் மமதா. அப்போது அவர் பேசுகையில், சிங்கூரில் தொழிற்சாலை வர வேண்டும் என விரும்புகிறோம். டாடா நிறுவனத்திற்காக வழங்கப்பட்ட இடத்தை மத்திய அரசுக்கு வழங்கினால், அதை ரயில்வே துறையின் தேசிய திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.
இதை தனியாருடன் இணைந்து மேற்கொள்வோம். இந்த இடத்தில் அந்தத் திட்டத்தைக் கொண்டு வர நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.
டாடா திட்டத்திற்காக விரும்பிக் கொடுக்கப்பட்ட 600 ஏக்கர் நிலப்பரப்புக்குள்தான் ரயில்வே திட்டம் அமையும், விவசாயிகளிடமிருந்து விருப்பத்திற்கு மாறாகப் பறிக்கப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை நாங்கள் அவர்களிடமே கொடுத்து விடுவோம்.
சிங்கூர் பகுதி மக்களுக்காக திரினமூல் காங்கிரஸ் போராடியபோது இந்தப் பகுதி மக்கள் கொடுத்த ஒத்துழைப்புக்குப் பரிசாக இந்த சிங்கூர் - ஹவுரா ரயில் சேவை தொடங்கப்படுகிறது என்றார் மமதா.