இலங்கையில் உள்ள இந்திய டாக்டர்கள் குழுவின் சேவைக்காலம் நீட்டிப்பு
கொழும்பு: இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு மருத்துவை சேவை செய்து வரும் இந்திய டாக்டர்கள் குழுவின் சேவைக்காலம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் முகாமிட்டு சேவை செய்து வருகிறது.
வவுனியாவில் ஒரு கள மருத்துவமனையை ஏற்படுத்தி அங்கிருந்தபடி இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அந்த தற்காலிக மருத்துவமனையின் சேவைக்காலம் ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3வது முறையாக மேலும் 2 மாதங்களுக்கு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், அறுவைச் சிகிச்சையாளர்கள், குழந்தைகள் நல நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள், பெண் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய 60 பேர் கொண்ட குழு தற்காலிக கள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறது.
இதுவரை 21 ஆயிரம் இலங்கை அகதிகளுக்கு இவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். குண்டுக் காயம் பட்டோர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர், தலைக் காயம் பட்டோர், பொது அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோர், குழந்தைகள் என பலர தரப்பினருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மாணிக்பார்ம் முகாமில் உள்ள தமிழர்களுக்கு இந்த மருத்துவமனை சேவையாற்றி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஜூலை 23ம் தேதி 30 பேர் கொண்ட ராணுவ மருத்துவக் குழு தற்போது கொழும்பு வந்துள்ளது. இந்தக் குழுவினர் ஏற்கனவே உள்ள மருத்துவக் குழுவினருடன் இணைந்து கொள்வார்கள். இவர்களுக்குப் பதில் ஏற்கனவே உள்ள குழுவைச் சேர்ந்த 30 பேர் நாடு திரும்புவார்கள்.
80 முன்னாள் வீரர்கள் வரவழைப்பு..
இதற்கிடையே, கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் 80 பேர் அடங்கிய குழு இலங்கை விரைந்துள்ளது. ஏற்கனவே அங்கு சென்றுள்ள இந்திய ராணுவக் குழுவுடன் இணைந்து இவர்கள் கண்ணி வெடிகளை அகற்றுவார்களாம்.
அழர்களில் 50 பேர் புனேவைச் சேர்ந்த ஹாரிசான் குருப்பைச் சேர்ந்தவர்கள். 32 பேர் ஹரியானாவைச் சேர்ந்த சர்வத்ரா டெக்னிக்கல் கன்சல்டன்ட்ஸ் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர மேலும் 32 பேரும் இலங்கை செல்லவுள்ளனர்.