புதுச்சேரி சட்டசபையில் அமளி-அதிமுக, பாமக வெளிநடப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. அதிமுக, பாமக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
காலை 9.30 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய சட்டசபை கூட்டத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக புதிதாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட இக்பால் சிங் தனது உரையை நிகழ்த்தினார்.
முன்னதாக சட்டசபைக்கு பாமக எம்எல்ஏக்கள் 3 பேரும் அரிக்கேன் விளக்குகளுடன் வந்தனர். துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் தனது உரையை துவக்கியவுடன் அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர், ஓமலிங்கம், பாமக எம்எல்ஏக்கள் அனந்தராமன், பன்னீர்செல்வம், அருள்முருகன் ஆகியோர் எழுந்து நின்று கடந்த மூன்று ஆண்டுகளாக பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை என்று குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ஆளுநர் உரையை தொடர்ந்து படித்தார். இதனால் பெரும் குழப்பம் நிலவியது. இந் நிலையில் அதிமுக, பாமக எம்எல்ஏக்க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த கூட்டத்தில் கடந்த முறை எதிர் வரிசையில் இருந்த புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன், கணபதி, ஆனந்து ஆகியோர் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆளும் கட்சியில் வந்து அமர்ந்திருந்தனர்.
அதே நேரத்தில் கடந்த முறை ஆளும்கட்சி வரிசையில் இருந்த பாமக எம்எல்ஏக்கள் எதிர் வரிசையில் அமர்ந்தனர்.
இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நாஜீம், முன்னாள் முதல்வர் ரங்கசாமி, அவரது ஆதரவாளரான நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.
துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் தனது உரையை ஆங்கிலத்தில் படித்து முடித்த பின் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ராதாகிருஷ்ணன் படித்தார். இதையடுத்து அவை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வரும் 5ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.