For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசின் சாதனைகளைச் சொல்லுங்கள் - அதிமுக ஓட்டுக்களையும் அள்ளுங்கள்: அழகிரி அட்வைஸ்

By Staff
Google Oneindia Tamil News

Alagiri
தூத்துக்குடி: திமுக அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். அதிமுகவினரின் வாக்குகளையும் நாம் பெற வேண்டும் என்று மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி திமுகவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் ஏரல் மகராஜா திருமண மகாலில் நேற்று காலை நடந்தது.

கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, டி.பி.எம்.மைதீன்கான், சுரேஷ்ராஜன், பூங்கோதை, பி.கீதாஜீவன், மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக மு.க.அழகிரி கலந்து கொண்டு வேட்பாளர் எம்.பி.சுடலையாண்டியை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அழகிரி பேசுகையில்,

தென்மண்டல அமைப்பு செயலாளரான பிறகு என்னை மாவட்ட செயலாளர்கள் வரவேற்க வந்த போது 10 பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்று சபதம் எடுத்தோம். அதில் ஒன்றை இழந்து உள்ளோம். மற்ற 9 தொகுதிகளில் நமது கூட்டணியினர் வெற்றி பெற்று உள்ளனர்.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று கலைஞர் சொன்னார். இன்று தெற்கிலும் தி.மு.க. வளர்ச்சி பெற்று உள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலின் போது இந்த தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று உள்ளோம். செல்வராஜ் எம்.எல்.ஏ 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் எதிரியே இல்லாத நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி.சுடலையாண்டி 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் இதை வெற்றியாக கருத முடியும்.

மெத்தனமாக இருக்காதீர்கள்...

இந்த தேர்தலில் நீங்கள் மெத்தனமாக இருந்து விடாதீர்கள். எப்போதும் போல் பணியாற்றுங்கள். நாளை (இன்று) முதல் அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் தேர்தல் பணிபுரிய வேண்டும்.

தம்பி மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு வருகிறார். மத்திய, மாநில அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், திருமண உதவித்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, சத்துணவில் முட்டை, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட அரசு சாதனைகளை வீடு வீடாக சென்று சொல்லுங்கள்.

அ.தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டு போடக்கூடாது என்று கூறி உள்ளனர். தொண்டர்களுக்கு ஓட்டு போட உரிமை உள்ளது. ஓட்டு போடக்கூடாது என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை.

அதிமுக வாக்குகளைப் பெற்றாக வேண்டும்...

அ.தி.மு.க.வினரின் ஓட்டுக்களை நாம் வாங்கியாக வேண்டும். இந்த தொகுதியில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இதில் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்களையும் வாங்க வேண்டும். அவர்களையும் ஓட்டு போட வைப்பது உங்கள் கடமை.

நிர்வாகிகள் மக்கள் குறைகளை கேட்டு நம் மாவட்ட செயலாளர், அமைச்சரிடம் கூறி, மக்களின் குறைகளை தீர்த்து வைத்தால், அவர்களின் ஓட்டு நமக்கு கிடைக்கும். இது தான் தந்திரம்.

உங்களுக்குள் போட்டி போடாதீர்கள். மக்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுங்கள். தொகுதிக்கு சென்று கட்சியை வளருங்கள். நான் பதவி இல்லாத போதே ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்தேன். ஆனால் தற்போது பதவி வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வாய்ப்பு கிடைத்து உள்ளது. பதவியை மக்களுக்கு நன்மை செய்ய பயன்படுத்துங்கள்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலில் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், இதோடு போட்டியை விட்டு விட்டு அனைவரும் அவரவர் இடத்தில் தேர்தல் பணியாற்றுங்கள் என்றார் அழகிரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X