முகாம்களில் தமிழர் நிலை நன்றாக உள்ளது-வேலூர் சக்தி அம்மா
வேலூர்: இலங்கை முகாம்கள் நல்ல நிலையில் உள்ளன. அங்குள்ள தமிழர்கள் நன்றாகவே உள்ளனர் என்று கூறியுள்ளார் அங்கு போய் நிவாரணப் பொருட்களைக் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ள வேலூர் சக்தி அம்மா.
வேலூர் திருமலைக்கோடியில் உள்ள நாராயணிபீட சக்தி அம்மா ஆன்மிக பணியுடன் சமுதாய பணியையும் செய்து வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சக்தி அம்மாவை தரிசனம் செய்ய வந்திருந்த சர்வதேச சேவை அமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் மேட் என்பவரிடம் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருந்து மற்றும் அத்தியாவசியமான உதவிகளை செய்யுமாறு சக்தி அம்மா கோரினார்.
அதன்படி அமெரிக்காவில் இருந்து 5 டன் மருந்து பொருட்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் நாராயணி பீடம் மூலமாக 10 ஆயிரம் லுங்கிகள், சேலைகள் சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
30 டன் எடையுள்ள கோதுமை மாவு உள்பட உணவுப் பொருட்களும் இலங்கையிலேயே கொள்முதல் செய்து லாரிகள் மூலம் அங்குள்ள முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இவற்றை நேரடியாக முகாம்களில் உள்ள மக்களுக்கு வழங்க சக்தி அம்மாவுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து சக்தி அம்மாவுடன் நாராயணி பீட நிர்வாகிகள் கடந்த 30-ந் தேதி கொழும்பு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து இலங்கை விமானப்படையினர் அவர்களை ஹெலிகாப்டர் மூலம் வவுனியாவில் உள்ள செட்டிக்குளம் முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
முகாமில் இருந்தவர்களுக்கு சக்தி அம்மா, உதவிப்பொருட்களை வழங்கினார். தனது கையால் வழங்கிய உதவிப் பொருட்கள் போக மீதம் இருந்த பொருட்களை இலங்கை ரத்தினபுரா மாகாணத்தின் முதல்வர் மஹிபாலா ஹீரத் மற்றும் சுகாதார செயலாளர் அர்தூலக் கந்திலியே ஆகியோரிடம் சக்தி அம்மா ஒப்படைத்தார்.
இதையடுத்து அவர் வேலூர் திரும்பினார். நேற்று செய்தியாளர்களை அவர் சந்தித்து தான் செய்த உதவிகள் குறித்தும் இலங்கை பயணம் குறித்தும் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், இலங்கை அகதிகள் முகாம்களில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் நல்ல நிலையில்தான் உள்ளனர். இலங்கையில் அவர்கள் எங்கெங்கு வசித்தார்களோ அங்கே செல்ல விருப்பப்படுகிறார்கள்.
முகாம்களில் அடிப்படை வசதிகள் நன்றாகவே இருக்கின்றன.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்துத் தெரியவில்லை. அரசியல் பயணமாக நாங்கள் செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சென்றோம். செய்தோம், திரும்பினோம். எனவே அதிபரை சந்திக்கவில்லை என்றார் சக்தி அம்மா.












Click it and Unblock the Notifications