திருச்சி வழியாக ரூ. 200 கோடி அபின் கடத்தப்படுவதாக தகவல் - போலீஸ் வேட்டை
திருச்சி: ரூ. 200 கோடி மதிப்புள்ள அபின் போதைப் பொருள் திருச்சி வழியாக கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி வழியாக சென்னைக்கு ரூ.200 கோடி மதிப்புள்ள அபின் கடத்தப்படுவதாகவும், கடத்தல் ஆசாமிகள் ஒரு காரில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருச்சி நோக்கி காரில் வந்து கொண்டு இருப்பதாகவும் மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகில் இரவு 9 மணி அளவில் போக்குவரத்து போலீசார் குறிப்பிட்ட எண்ணுள்ள அந்த காரை வழிமறித்து மடக்கி பிடித்தனர்.
அந்த காரில் ஒட்டன் சத்திரத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் 2 பேர் இருந்தனர். அவர்கள் சென்னையில் நடைபெற உள்ள ஒரு திருமணத்திற்கு செல்வதாக கூறினார்கள். காரை தீவிரமாக சோதனை போட்டனர்.
காரில் இருந்த 2 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். இதனால் அங்கு மக்கள் கூடினர், பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காரில் இருந்த இருவரையும், காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்திற்கு காருடன் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் மோப்ப நாய் ரோசி வரவழைக்கப்பட்டு, அந்த காரில் மீண்டும் சோதனை போடப்பட்டது. இதன் பின்னர் தான் போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காரில் வந்த இருவரிடமும் போலீசார் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.
காரில் வந்தவர்களின் எதிரிகள் வேண்டும் என்றே இதுபோன்ற வதந்தியைப் பரப்பியிருக்கலாமோ என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.