போலி என்கவுண்டர்-ரூ. 3 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
டெல்லி: சென்னை வியாசர்பாடியில், சுரா என்கிற சுரேஷ் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு, அவரது தாயாருக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சுரா. பிரபல தாதா. இவரை 2002ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இரவு, சென்னை கிளைவ் பேட்டரி, இப்ராகிம் தெருவில் வைத்து போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
போலீஸாரைத் தாக்க முயன்றபோது சுரா சுட்டுக் கொல்லப்பட்டதாக பின்னர் போலீஸார் தெரிவித்தனர். அப்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் விஜயக்குமார்.
இதையடுத்து சுராவின் தாயார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுகினார். அங்கு அவர் தாக்கல் செய்த மனுவில், 2002ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி சுரேஷை, போலீஸார் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் போலியான என்கவுண்ட்டரை நடத்தி சுட்டுக் கொன்று விட்டனர் என்று கூறியிருந்தார்.
இதற்குப் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சுரேஷ் ஒரு பிரபல குற்றவாளி. சம்பவ தினத்தன்று, அவன் மோட்டார் சைக்கிளில் வந்தான். அவனை நிறுத்த முயன்றபோது கேட்காமல் வேகமாக சென்றான். மேலும், தான் வைத்திருந்த கத்தியால் சப் இன்ஸ்பெக்டரை வெட்டினான். நாட்டு வெடிகுண்டையும் போலீஸார் மீது வீச முயன்றான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில், சப் இன்ஸ்பெக்டருக்கு ஏற்பட்ட காயத்தை போலீஸார் மிகைப்படுத்தி கூறியுள்ளனர். மேலும் குண்டு வீசப்பட்டதற்கான எந்தத் தடயமும் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லை.
சுரேஷைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் போலீஸார் சுட்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தமிழக அரசு அனுப்பிய பதிலில், தவறு செய்த போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த மனித ஆணையம், சுரா மீது கிரிமினல் வழக்குகள், குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருக்கலாம். ஆனால் அதை வைத்து அவர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முடியாது.
பொருளாதார ரீதியில் சுரேஷை நம்பியிருந்த அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அவசியம். சுரேஷின் குடும்பத்திற்கு தமிழகக அரசு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகையை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான ஆதாரத்துடன், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எட்டு வாரங்களுக்குள் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.