உச்சரிப்பில் கொல்லும் வட இந்தியர்கள்-ஸ்பெல்லிங்கை மாற்றினார் அழகிரி
வாயிலேயே நுழையாத பெயர் உடையவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்கள்தான். விதம் விதமான பெயர்களாக இருக்கும். ஆனாலும் கூட தென்னிந்தியர்கள், இந்தப் பெயர்களை சிரமப்பட்டு உச்சரித்து விடுவார்கள். கிட்டத்தட்ட சரியாகவே பேசி விடுவார்கள்.
ஆனால் வட இந்தியர்கள் அப்படி அல்ல. அவர்கள் வாயில் நுழைகிற பெயர்களை மட்டுமே சரியாக சொல்வார்கள். மற்றவற்றை குத்காவைப் போட்டு குதப்பித் துப்புவது போல கொத்தி எடுத்து விடுவார்கள்.
அதிலும் சுத்தத் தமிழ்ப் பெயர்களை அவர்கள் சொல்லும் அழகே தனிதான். இது நம்ம பெயர்தானா என்று நமக்கே பயம் வந்து விடும். தூய தமிழ்ப் பெயர்களை வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே போனாலே சிக்கல்தான்.
அப்படி ஒரு சிக்கலில் நம் மு.க.அழகிரி இப்போது சிக்கி தடுமாறிப் போயிருக்கிறார். அவரது பெயரை ஒருவர் கூட இதுநாள் வரை ஒரு முறை கூட சரியாக உச்சரித்ததில்லையாம். பிரதமர் முதல் சக அமைச்சர்கள் வரை யாருக்குமே அவரது பெயரை சரிவர சொல்லத் தெரியவில்லையாம்.
மேலும், ஆங்கில மீடியாக்களும், இந்தி மீடியாக்களும் அழகிரியின் பெயரை உச்சரிக்கும் அழகைப் பார்த்து அவர் பயந்தே போய் விட்டார்.
இந்தப் பஞ்சாயத்தே வேண்டாம் என தற்போது தனது பெயரில் வரும் ஸ்பெல்லிங்கை மாற்றி விட்டார். இதுநாள் வரை தனது பெயரை Azhagiri என்று ஆங்கிலத்தில் எழுதி வந்தார் அழகிரி. தற்போது அதை Alagiri மாற்றியுள்ளார். இதை முறைப்படி கெஜட்டிலும் பதிவு செய்து விட்டாராம்.
தமிழின் சிறப்பு எழுத்து ழகரம். இதை ஆங்கிலத்தில் எழுதும்போது zh என்று போடுவது தமிழர்களின் வழக்கம். இது நமக்குப் புரியும். ஆனால் வட இந்தியர்கள் இதை ஜா அல்லது ஸா என்று உச்சரிக்கிறார்கள். இதனால் ஆரம்பத்தில் அழகிரியை அஸகிரி என்று கூட மீடியாக்கள் கூறின.
முன்பு கனிமொழிக்கும் கூட இந்த சிக்கல் வந்ததாம். கனிமொழியின் பெயரை வடக்கத்தியர்கள் கடித்துக் குதறிக் கூறுவதைக் கேட்கும்போது ஏதோ நமது பெயரைத்தான் சொல்கிறார்கள் என நினைத்துக் கொள்வாராம் கனிமொழி.