தேர்தல் களத்தில் ஸ்டாலின்-விஜயகாந்த் விறுவிறு
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்றும், நாளையும் இத் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டசபை இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பில்
சுடலையாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஸ்டாலின், இத் தொகுதிக்குட்பட்ட பழைய காயலில் இன்று மாலை வேன் மூலம் பிரசாரத்தை துவக்குகிறார்.
தொடர்ந்து முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல், சாயர்புரம் உள்ளிட்ட பல ஊர்களில் பிரசாரம் செய்கின்றார். அவர், ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரத்தை முடிக்கிறார்.
நாளை இரண்டாவது நாளாக திரவியபுரத்தில் பிரசாரத்தை
துவக்கி புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சிவஞானபுரம், தங்கம்மாள்புரம் உள்ளிட்ட பல ஊர்கள் வழியாக சென்று, ஆழ்வார்கற்குளத்தில் பிரச்சாரத்தை முடிக்கிறார்.
இளையான்குடியில் விஜயகாந்த் பிரச்சாரம்..
இந் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை இளையான்குடியில் தனது பிரச்சாரத்தை துவக்குகிறார்.
தேமுதிக வேட்பாளர் பாலகிருஷ்ணனை ஆதரித்து இளையான்குடி ஒன்றியம் சூராணம் கிராமத்தில் பிரச்சாரத்தை துவக்கும் விஜயகாந்த் அங்கிருந்து வண்டல், பாளை கிராமம், கோட்டையூர், இளையாங்குடி டவுன், இளையாங்குடி புதூர், திருவள்ளூர், கீழாநெட்டூர், முனைவென்றி, இளமனூர் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
நாளை மறுநாள் ஆர்.எஸ். மங்கலம், ஆனந்தூர், கூடலூர், கற்காத்தகுடி, பணவேலி, உப்பூர், திருப்பாறைக்குடி, சோழந்தூர், ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
விதி மீறல்-11 வழக்குகள் பதிவு:
இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொகுதி 16 மண்டலமாக பிரிக்கப்பட்டு நன்னடத்தை விதிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அனுமதி பெறாமல் தேர்தல் விதியை மீறி டிஜிட்டல் போர்டுகள் வைத்தாக திமுக, புதிய தமிழகம் கட்சியினர் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பழையகாயல் பஜார், முக்காணி பஜார், உமரி்க்காடு, ஏரல் பஸ் நிலையம், அகரம் மெயின் ரோடு, உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டல் போர்டு வைத்தாக திமுகவினர் மீதும்,
புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் போர்டு வைத்ததாக புதிய தமிழகம் கட்சியினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications