விளம்பர பலகைகள்-மேயர், கமிஷனர் மீது டிராபிக் ராமசாமி வழக்கு!
சென்னை: சென்னை நகரில் மீண்டும் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து மாநகராட்சி மேயர், காவல்துறை ஆணையர் ஆகியோர் மீது சமூக சேவகர் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில்,
சென்னை நகரில் உள்ள சாலை ஓரங்களில் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற வேண்டும் என 28.4.2008 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை ஏற்று நகரம் முழுவதும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு வந்தன.
ஆனால் இப்போது சில இடங்களில் மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு அந்த நிகழ்ச்சியை அறிவிக்கும் வகையில், விளம்பர பலகை வைக்கலாம் என்று மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. இது கோர்ட்டு உத்தரவை மீறும் செயலாகும்.
மாநகராட்சி நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கி இருந்தாலும் அதற்கு முன்பே பலகைகளை வைத்து விடுகின்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் பல நாட்கள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கின்றன.
கோர்ட்டு உத்தரவை மீறி விளம்பர பலகை வைத்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கோர்ட்டு அவமதிப்பாகும்.
எனவே மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி, காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஷோபனா ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.