முகாம்களிலிருந்து 1000 தமிழர்கள் வெளியேற இலங்கை அனுமதி
வவுனியா: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 1000 தமிழர்கள் வெளியேற இலங்கை அரசு அனுமதித்துள்ளது.
கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முகாம்களில் அடைத்து வைத்துள்ளது இலங்கை அரசு. இவர்கள் மின் வேலிகளால் அடைக்கப்பட்டுள்ள முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.
தற்போது இவர்களை படிப்படியாக மறு குடியேற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 1000 பேர் மறு குடியேற்றம் செய்யப்படுகின்றனர்.
இதுதொடர்பாக முகாமில் நடந்த நிகழ்ச்சியொன்றில், அதிபர் ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே, அவர்களுக்கு சிறப்பு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
இதையடுத்து ஆண், பெண், குழந்தைகள் அடங்கிய அந்த 1000 பேரும் தங்களது உடமைகளை கேன்வாஸ் பைகளில் எடுத்துக் கொண்டு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இதுவரை வவுனியா முகாம்களில் தங்கியிருந்தவர்கள் ஆவர். வரும் வாரங்களில் மேலும் பலர் மறு குடியேற்றம் செய்ய்படுவார்கள் என்று பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தற்போது அனுப்பட்டுள்ளோரில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் மறு குடியேற்ற நடவடிக்கைகக்கு உட்படுத்தவில்லை.