தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் இலவச டிவி
புதுச்சேரி: தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படும் என அம் மாநில முதல்வர் வைத்திலிங்கம் கூறினார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வைத்திலிங்கம்.
அதன் முக்கிய அம்சங்கள்:
-தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 2 கறவை பசுக்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பதில் இனி ஒரு கறவை பசு (ரூ.12,000 மிகாமல்) இலவசமாக வழங்கப்படும்.
-ஏனாமில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்,
-புதுச்சேரி மாநிலத்திற்கு என்று தனியாக பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
-இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி சந்திப்புகளில் ரூ.100 கோடியில் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படும்.
-புதிதாக 50 பேருந்துகள் வாங்கப்படும்.
-வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகளை இலவசமாக வழங்கப்படும்.
-மாஹே மற்றும் ஏனாமில் ஆற்று உல்லாச படகு சேவையும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடல் உல்லாச படகு சேவையும் அமல்படுத்தப்படும்.
-புதுச்சேரியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமும், நீச்சல் குளமும் உருவாக்கப்படும்.
-காரைக்கால் பொது மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு துவக்கப்படும்.
-புதுச்சேரி, மாஹே மற்றும் ஏனாமில் கடற்கரை காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், ஓ.எம்.சக்தி சேகர், ஓமலிங்கம் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் விஸ்வநாதன், கலைநாதன் ஆகியோரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். முதல்வர் வைத்திலிங்கம் பட்ஜெட்டை வாசித்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்ப செய்தனர். அதேபோல பாமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருந்த போது திமுக எம்எல்ஏக்களான சிவா, ராஜாராமன், நந்தா சரவணன் ஆகியோர் பட்ஜெட்டில் புதுச்சேரியும், காரைக்காலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.
இது குறித்து மானியக் கோரிக்கைகளின்போது நீங்கள் பேசலாம் என்று சபாநாயகர் கூறியதையடுத்து அவர்கள் அமைதியாக அமர்ந்தனர்.












Click it and Unblock the Notifications