சிறப்பு பொருளாதார மண்டல டெலவப்பர்கள் சங்கம் தொடங்கினர்
சென்னை: சிறப்பு பொருளாதார மண்டலங்களின் டெவலப்பர்கள் இணைந்து புதிய சங்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு சிறப்பு பொருளாதார மண்டல அடிப்படைக் கட்டமைப்பு டெவலப்பர்கள் சங்கம் (Tamil Nadu Association of SEZ Infrastructure Developers) என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுனில் ரல்லான் கூறுகையில், தமிழக அரசுடன் இணைந்து, சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்த இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 31 சிறப்புப் பொருளாதார மண்டல டெவலப்பர்களில் இதுவரை 22 பேர் எங்களுடன் இணைந்துள்ளனர். மற்றவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
சங்கத்தின் முதல் கூட்டம் ஜூலை 30ம் தேதி நடந்தது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பி்ரச்சினைகள் குறித்து பல்வேறு அரசுத் துறைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு இந்த சங்கம் உதவும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சட்டம் வெறும் பேச்சளவில் உள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
சிறப்புப் பொருளாதார மண்டங்கள் முத்திரைத்தாள் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய வர்த்தகத்துறை அறிவித்துள்ளது. இதை மாநில அரசுக்குத் தெரியப்படுத்தி அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.